முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆளுநர் உரை தமிழகத்தை பீடித்திருக்கிற நோய்கான மருந்து

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.4 - தமிழக ஆளுநர் உரை தமிழகத்தை பிடித்திருக்கிற நோயை அடையாளம் காட்டுவதற்கு சரியான மருந்தாக உள்ளது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் ஆளுநர் உரை சம்பந்தமான அறிக்கை வருமாறு:-

தமிழ்நாட்டின் இன்றைய நிலையை பிரதிபலிப்பதாக ஆளுநர் உரை உள்ளது. சட்டம் ​ ஒழுங்கு கெட்டு விட்டது என்பதும், பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது என்பதும், குறிப்பாக விவசாயத்துறை சீரழிந்து வருவதும், ஏழ்மை குறையவில்லை என்பதும், வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும், விலைவாசி உயர்வு அதிகரித்து வருவதும் போன்ற நிலைமைகளை ஆளுநர் உரை தெளிவாக்குகிறது.

சட்ட விரோதமாக அபகரித்த சொத்துக்கள் மீட்டு உரியவர்களுக்கு தரப்படும் என்றும், சட்ட மேலவை அகற்றப்படும் என்பதும், வயோதிகர்களுக்கும், மீனவர்களுக்கும் உதவித் தொகை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நேரடியாக அந்த உதவி அவர்களை சென்றடைய வழி வகுக்கப்படும் என்பதும், புதிய தலைமைச் செயலகக் கட்டிட ஊழல் பற்றி விசாரணை நடத்தப்படும் என்பதும் வரவேற்கத்தக்கவையாகும்.

இலவச அரிசி, இலவச மடிக் கணினி, இலவச மிக்ஸி, மின் விசிறி வழங்குதல், கேபிள் டிவி அரசுடைமையாக்குதல் போன்ற தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆளுநர் உரையின் மூலம் செயல்படுத்தப் படவுள்ளன என்பது ஏழை மக்களுக்கு நம்பிக்கை தருவதாகும். மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த கலைஞர் வீட்டு வசதி திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம் போன்ற குறைபாடுள்ள திட்டங்களை அகற்றி, சூரிய மின்வசதியுடன் கூடிய பசுமை வீடு திட்டம், அனைவரும் மருத்துவ வசதி பெறும் திட்டம் போன்றவை வழி வகுக்கப்பட்டிருப்பது பாராட்டப்பட வேண்டியவை.

ஆளுநர் உரையில் தமிழகத்தின் நிதி நிலை பற்றி கோடிட்டுக் கூட காட்டப்படவில்லை என்பதால், ஒரு வேளை இது சம்பந்தமான விவரங்கள் நிதி நிலை அறிக்கையின்போது தெளிவாக்கப்படலாம். பொதுவாக ஆளுநர் உரை இன்றைய தமிழகத்தைப் பீடித்திருக்கிற நோயை அடையாளம் காட்டுவதோடு, அதற்குரிய சரியான மருந்தாகவும் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்