முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலை வாங்கி தருவதாக மோசடி: திமுக பிரமுகர் கைது

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

தென்காசி. ஆக. 10 - குற்றாலம் அருகே சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை மோசடி செய்துவிட்டு பணத்தை திரும்ப கேட்டவரை கொலை செய்து விடுவதாக மிரட்டிய திமுக பிரமுகரை குற்றாலம் போலீஸார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் திமுகவினர்கள் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியை பயன்படுத்தி செய்த பல்வேறு குற்றங்கள் இப்போது அம்பலமாகி வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகே சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை வாங்கிவிட்டு வேலையும், வாங்கித் தராமல் அந்த பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றிய திமுக பிரமுகர் பணத்தை திரும்ப கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக குற்றாலம் போலீஸார் திமுக பிரமுகர் உட்பட 2 பேர்களை கைது செய்த சம்பவம் குற்றாலம், தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை எம்.எஸ்.கரையாளர் தெருவை சேர்ந்தவர் செண்பகம்  என்பவரது மகன் விஜயேந்திரன் (எ) கண்ணன் (வயது 35) இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தங்கை மகேஷ்வரி என்ற பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்க முயற்சி செய்துள்ளார்.  அதை அறிந்த குற்றாலம் அருகே உள்ள கடபோகாத்தி கிராமம் காந்தி காலணி பகுதியை சேர்ந்த சடையாண்டி என்பவரது மகன் இசக்கி (வயது 42)  தான் திமுகவில் முக்கிய பிரமுகர்கள் எனக்கு மிகவும் வேண்டியவர்கள் எனவே என்னிடம் பணம் கொடுத்தால் சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பிய செங்கோட்டை விஜயேந்திரன் (எ) கண்ணன் இசக்கியிடம் ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட இசக்கி ஆண்டுகள் பல கடந்த நிலையில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் விஜயேந்திரன் (எ) கண்ணன் திமுக பிரமுகரான இசக்கியிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார்.ஆனால் அதற்கு இசக்கி பல்வேறு காரணங்களை கூறி ஏமாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு இசக்கி விஜயேந்திரனிடம் நீங்கங் கொடுத்த 1.80 லட்சத்தில் 50 ஆயிரம் ரூபாய் அமைச்சரிடம் கொடுத்து விட்டேன். எனவே மீதமுள்ள 1.30 லட்சத்தை நான் தந்து விடுகிறேன் என்ற கூறியுள்ளார். அதன்பிறகும் பணம் திரும்ப வரவில்லை. இதனால் பலமுறை இசக்கியை தேடிச்சென்ற நிலையில் இசக்கி விஜயேந்திரனிடம் ரூபாய் 30 ஆயிரத்தை திரும்ப கொடுத்துள்ளார். மீதம் 1 லட்சம் ரூபாயை கேட்டபோது  திமுக பிரமுகர் இசக்கி இனிமேல் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவேன். என்று மிரட்டியுள்ளார். இதனால் அச்சம் அடைந்த விஜயேந்திரன் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்றுக் கொண்ட குற்றாலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பூமிநாதன் , சப்இன்ஸ்பெக்டர் சிவனு மற்றும் போலீஸார் திமுக பிரமுகர் இசக்கி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த  அதே பகுதியை சேர்ந்த சண்முகவேல்  என்பவரது மகன் மதியழகன் (வயது 46) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள இசக்கி  திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றிய திமுக துணைச்செயலாளராகவும், குணராமநல்லூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவருமாகவும் இருந்துவருகிறார். இவர் மேலும் பல பேர்களிடம் இதைப்போல வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே குற்றாலம் போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குற்றாலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்