முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருச்செந்தூர், ஆகஸ்ட்.27 -  திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா 8ம் நாளான நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா நடைபெற்றது. நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நாளான 8ம் திருவிழா நேற்று (வெள்ளிகிழமை) நடைபெற்றது. காலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை பட்டுடுத்தி, வெண்மலர்கள் சூடி பிரம்மா அம்சமாக பக்தர்களுக்கு காட்சி அளித்து 8 வீதிகளிலும் வலம் வந்து மேலக் கோயில் சென்றடைந்தார். 

காலை 10.20 மணிக்கு சுவாமி சண்முகர் அத்தை மர கடைசல் சப்பரத்தில் பச்சை பட்டுடுத்தி பச்சை மலர்கள் அணிந்து விஷ்ணு அம்சமாக காட்சியளித்து 8 வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து திருக்கோவில் சென்றடைந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். 

விழாவின் முக்கிய நாளான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 6.20க்குள் நடைபெறுகிறது. முதலில் விநாயகர் தேர் நான்கு ரதவீதிகள் வழியாக பவனி வந்து நிலையம் வந்தடைகிறது. அதனை தொடர்ந்து சுவாமி குமரவிடங்கா பெருமான் சர்வ அலங்காரங்களுடன் திருத்தேரில் நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்து நிலையம் வந்தடையும். அதன் பின் வள்ளியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் நான்கு ரதவீதிகளிலும பவனி வந்து நிலையம் வந்தடையும். தேரோட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்செந்தூர் டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் இணை ஆணையர் பாஸ்கர் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்