முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை 11ல் மத்திய பொது பட்ஜெட் தாக்கல்?

புதன்கிழமை, 18 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 19 - ஜூலை 9ம் தேதியன்று ரயில்வே பட்ஜெட்டும், அதனைத் தொடர்ந்து 11ம் தேதியன்று பொது பட்ஜெட்டும் தாக்கலாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, கடந்த மே மாதம் பதவியேற்றது. இந்த நிலையில், புதிய அரசின் பட்ஜெட் வருகிற ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படலாம் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

பொது பட்ஜெட் தயாரிப்பு பணியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், ரயில்வே பட்ஜெட் தயாரிப்பு பணிகளை ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா மேற்கொண்டுள்ளார்.

மோடி அரசு பதவியேற்றதும் தாக்கலாக உள்ள முதல் பட்ஜெட் என்பதால் சாமான்ய மக்கள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சம்பளதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்த பட்ஜெட்டில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது சம்பளதாரர்களின் கோரிக்கையாக இருந்தாலும், குறைந்த பட்சம் ரூ. 3 லட்சமாகவாவது உயர்த்தப்படும் என நிதியமைச்சக வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.

அதே சமயம் ரயில்வே பட்ஜெட்டில் நிச்சயம் பயணிகள் மற்றும் சரக்கு கட்டண உயர்வு நிச்சயம் இருக்கும் என தெரிகிறது. கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா ஏற்கனவே கூறியுள்ளார்.

பொதுமக்களை கவரும் வகையில் புதிய ரயில்கள் மற்றும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 7ம் தேதி தொடங்கி 25ம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்