முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழா வருகிற 1ந் தேதி தொடங்குகிறது

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      திருநெல்வேலி

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழா வருகிற 1ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா வருகிற 1ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கொடி மரத்துக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறுகிறது.  மாசித் திருவிழாவின் போது சுவாமி அம்பாளுடன் தினமும் காலை மற்றும் மாலையில் ஒவ்வொரு வாகனத்திலும் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்கள் காட்சி கொடுகின்றார். 2ம் திருநாள் காலையில், சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும், மாலையில் சுவாமி சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் உலா வருகிறார்கள். அதேபோல் 3ம் திருநாள் காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி பூங்கோயில் சப்பரத்திலும், அம்பாள் கேடய சப்பரத்திலும், மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்க முத்துகிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் உலா வருகிறார்கள். 4ம் திருநாள் காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்கமுத்து கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வானத்திலும், மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் உலா வருகிறார்கள்.

 5ந் தேதி 5ம் திருநாள் காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். பின்னர் மாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையாகி சுவாமி, அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 6ம் திருநாள் காலையில் சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வருகிறார். இரவுவில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.

 7ந் தேதி 7ம் திருநாள் அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமான் உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர், சண்முக விலாச மண்டபத்தில் இருந்து வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருள்கிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார்.  8ம் திருநாள் அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். அன்று காலை 11.30 மணிக்கு சுவாமி சண்முகர், பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்கிறார். பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும், வெள்ளிக்குதிரை வாகங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின்னர் மேலக்கோவில் சேர்கிறார்.  9ந் தேதி 9ம் திருநாள் காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி அம்பாள் பல்லக்கில் வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்கின்றனர். இரவு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வருகின்றனர்.

 10ந் தேதி 10ம் திருநாள் காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விநாயகர், சுவாமி, அம்பாள் தனித் தனி தேரில் ரதவீதிகளில் பவனி வருகிறார்கள். 11ம் திருநாள் மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள மண்டபத்தில் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாரானை நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்மபாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். இரவு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி தெப்பத்தில் 11 சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

 12ந் தேதி 12ம் திருநாள் மாலையில் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் சுவாமியும், அம்பாளும் எட்டு வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரத வீதியில் உள்ள மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் வீதிஉலா வந்து கோவிலை சேர்கிறார்கள்.

 விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்