முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு குப்பைகளை தரம் பிரிக்கும் பயிற்சி அளிக்கப்படும்:

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      சேலம்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை செயலாக்கம் , வெளியிடங்களில் மலம் கழித்தலை அறவே தவிர்த்தல் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சுகாதார மேம்பாட்டு பகுதிகளாக மாற்றுதல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களை முழுமையாக ஈடுபடுத்தி, இத்திட்டத்தை பொதுமக்களிடையே எடுத்து செல்லும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.  குறிப்பாக குடிசைப்பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு கழிவறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் ,  திறந்த வெளியில் மலம் , சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,  விளக்குவதற்கு ஏதுவாக  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தூய்மை இந்தியா திட்டம் செயலாக்கம் தொடர்பான அனைத்து விவரங்களும் வழங்கப்படும். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு  திடக்கழிவு மேலாண்மை செயலாக்கம், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும். இப்பயிற்சியில்  மகளிர்  சுய உதவிக்குழுவினருக்கு பொது மக்களிடமிருந்து பெறப்படும் திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மறு சுழற்சிக்கு பயன்படும் வகையில்  தரம் பிரித்து அவற்றின் மூலம்  பரவலாக்கப்பட்ட உரம் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளுவதற்கான நடைமுறைகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும். சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து மகளிர் சுய உதவிக்குழுவினரையும் இப்பணியில் ஈடுபடுத்தி சேலம் மாநகரை தூய்மையான மாநகராக மாற்றுவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என  தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் க.இரா.செல்வராஜ்  தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்