முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தினால் தமிழகத்தில் பெண்களின் கல்வி கற்கும் சதவீதம் அதிகரித்துள்ளது: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே தகவல்

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செ.செம்மலை முன்னிலையில் நேற்று (04.01.2018) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கி கலெக்டர் பேசியதாவது.

தாலிக்கு தங்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் கல்வி முன்னேற்றத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே வழங்கி வந்த திருமண உதவித்தொகையுடன் தாலிக்கு 4 கிராம் தங்கத்தை 8 கிராமாக உயர்த்தி ஆணையிட்டார்கள். இதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் அந்தந்த சட்டமன்ற தொகுதியில் உள்ள பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு துறைகளின் மூலம் எண்ணற்ற பல சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் நலனை பாதுகாக்கும் வகையில் சமூகநலத்துறை மூலம் திருமண நிதியுதவித் திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம், இலவச தையல் இயந்திர திட்டம், குழந்தைகளின் உடல்நலத்தை மேம்படுத்தும் வகையில் அங்கன்வாடி மையங்களில் ஐவகை உணவுத் திட்டம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு திட்டம், பாரம்பரிய உணவுத்திருவிழா ஆகிய திட்டங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இத்தகைய திட்டங்கள் மூலம் ஆண்களை காட்டிலும் பெண்களின் கல்வி கற்கும் சதவீதம் அதிகரித்துள்ளது.

திருமணநிதி உதவி

 

சேலம் மாவட்டத்தில் 2011 முதல் 2018 வரை 38,287 பயனாளிகளுக்கு 1,53,148 கிராம் தங்கமும் ரூ.134.86 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 399 பயனாளிகளுக்கு 3,192 கிராமம் தங்கமும், ரூ.1.47 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவியும் வழங்கப்படுகிறது. அரசின் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் தங்கள் வாழ்வில் மேன்மேலும் உயர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, பேசினார்.

இவ்விழாவில் மேட்டூர் சார் கலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட சமூக நல அலுவலர் பரிமளாதேவி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரசேகர், கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் பாலசுப்ரமணி, வட்டார கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் ஜெயகுமார், மேட்டூர் வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து