முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் இன்று புத்தகத் திருவிழா: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைக்கிறார்

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று தொடங்கும் புத்தகத் திருவிழாவில் 250 அரங்குகளில் 50 லட்சம் புத்தகங்கள் இடம் பெறுகின்றன.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் 13-வது மதுரை புத்தகத் திருவிழா இன்று தொடங்கி செப்டம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா இன்று  மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார். மாவட்ட கலெக்டர் எஸ்.நடராஜன், எம்.எல்.ஏ.க்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, எஸ்.எஸ்.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.  இது குறித்து செயலர் அரு.வெங்கடாசலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 41 ஆண்டுகளாக புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டுமே நடத்தப்பட்ட இக்கண்காட்சி, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் துவங்கப்பட்டது. தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் தொடர்ந்து நடத்தப்படும் இக்கண்காட்சிக்கு வாசகர்களின் வருகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில், 250 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. ஒரு லட்சம் தலைப்புகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50 லட்சம் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. இந்த ஆண்டு 3 லட்சத்துக்கும் அதிகமான வாசகர்கள் கண்காட்சிக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாசிக்கும் பழக்கம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். தினமும் மாலையில் இலக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக, புத்தகத் திருவிழா வளாகத்தில் 10 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்படுகிறது. இந்த சிலையை செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறும் விழாவில், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் திறந்து வைக்கிறார்.

மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் தலைமை வகிக்கிறார். திருக்குறளோடு நாம் என்ற தலைப்பில் காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு பேசுகிறார்.

அடுத்தடுத்த நாள்களில் நடைபெறும் நிகழ்வுகளில் சென்னை வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் ஜெ.கமலநாதன், பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், பேராசிரியர் இரா.மோகன், எழுத்தாளர் சு.வெங்கடேசன், தெற்கு ரயில்வே மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பேசுகின்றனர்.

செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ , புரவலர் நல்லி குப்புசாமி செட்டி உள்ளிட்டோர் பேசுகின்றனர் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து