முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெற்றோர்களின் சொத்தில் ஆண்களுக்கு பங்கு இருப்பது போல பெண் பிள்ளைகளுக்கும் சமபங்கு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமையில் சமபங்கு உண்டு வழங்க வேண்டும் என்று சுப்ரீ்ம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சொத்துக்களை பிரிக்கும் போது ஆண்களைப் போலவே பெண் பிள்ளைகளுக்கும் சமபங்கு வழங்கக் கோரிய வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இத்தகைய தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. 

இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த 2005-ம் ஆண்டிற்கு முன்பு இருந்த இந்து வாரிசு உரிமை சட்டத்தில் பெற்றோர்களின் சொத்தில் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றிருந்தது. 

அதே சமயத்தில் 2005-ல் பெற்றோர்களின் சொத்தில் ஆண்களை போலவே பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்று சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு இயற்றப்பட்டது.

அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதில், ஏற்கனவே 2005-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இந்திய வாரிசு உரிமை சட்ட திருத்தும் செல்லும் என்றும், பெற்றோர்களின் சொத்தில் ஆண்களுக்கு பங்கு இருப்பது போலவே பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்று சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பு வழங்கியுள்ளது. இது பெண்களுக்கு சாதகமான ஒரு தீர்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த  உத்தரவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.  இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் சுப்ரீம் கோர்ட் பூர்வீக சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன். இந்த தீர்ப்பால், சமூகநீதி நிலைநாட்டப்பட்டதுடன், பெண்கள் முன்னேற்றத்திற்கு இது மேலும் வலுசேர்ப்பதாக அமையும் என்று பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன்.

பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென 1989-ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி இது. உரிமை கொண்டவர்களாக பெண்ணினம் உயர அடித்தளம் அமைக்கும் தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து