முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்ற தேர்தலின் போது அமைக்கப்பட்ட அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தொடரும்: அமித்ஷா முன்னிலையில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நாடாளுமன்ற தேர்தலின் போது அமைக்கப்பட்ட அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்று அமித்ஷா முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்தனர். 

தமிழகத்தில் ஒரு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார். சிறப்பு விமானம் மூலம் மதியம் 1.40-க்கு அவர் சென்னை வந்தடைந்தார். அவரை வரவேற்க வழி நெடுகிலும் பா.ஜ.க. தொண்டர்கள் குவிந்திருந்தனர். சென்னை விமான நிலையம் வந்த அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், சி.டி.ரவி, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்திலிருந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஹோட்டல் லீலா பேலசில் தங்குவதற்காக சென்றார். வழியில் இருபுறமும் பா.ஜ.க. தொண்டர்கள் நிற்பதைப் பார்த்த அவர் காரை விட்டு இறங்கி சிறிது தூரம் நடந்துச் சென்றார். அவருக்கு தொண்டர்கள் உற்சாகத்துடன் கை அசைத்தனர். சில இடங்களில் அ.தி.மு.க. தொண்டர்களும் கட்சிக்கொடியுடன் நின்று அமித்ஷாவுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்பு கொடுத்தனர். அமித் ஷாவின் சென்னை வருகைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்காக 4 இணை ஆணையர்கள், 10 துணை ஆணையர்கள் தலைமையில் 2000 போலீஸார் கொண்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர்  நினைவு பரிசு வழங்கினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி  விநாயகர் சிலையையும், துணை முதல்வர்  நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர். அதை தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர் மத்திய அமைச்சர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி  பழனிசாமி கூறியதாவது;-

அவிநாசி சாலை- உயர்மட்ட சாலை திட்டத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.  தமிழகத்தின் முக்கிய நதி இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும்.   தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.   நிர்வாக திறனில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. நாட்டிலேயே நீர் மேலாண்மையில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது.  கொரோனா நோய் பரவலை தடுக்க பிரதமர் மோடி சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும். 

தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது .  மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்ததும் கடைமடை பகுதிகளுக்கும் சென்று சேர்ந்துள்ளது.   புதிய திட்டங்களால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பருவ காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயர பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.  காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு விரைந்து அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

 

இதனையடுத்து விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இனிவரும் தேர்தல்களில் அ.தி.மு.க, பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார். மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் 3-வது முறையாக வெற்றிக்கனியை பறிப்போம் என்றும் அவர் கூறினார்.  இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா, முதல்வர், துணை முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து