சென்னை : வரும் 22-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. சட்டப்பேரவை கூட்டம் கூடவிருக்கும் நிலையில், இது தொடர்பான ஆலோசனையும், ஜெயலலிதா நினைவிட திறப்பு தொடர்பான ஆலோசனை குறித்தும் விவாதிக்கப்படவிருக்கிறது.
மிகவும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமிதாஷா உடன் முதல்வர் மரியாதை நிமித்தமாக ஆலோசனை நடத்தினார்.
இந்த சூழலில் வருகின்ற 22-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 3-வது முறையாக அ.தி.மு.க. தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வரக்கூடிய தேர்தல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு, தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் சட்டப்பேரவை கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.