முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா படப்பிடிப்பு தளம் அமைக்க ரூ.3½ கோடி: ஆர்.கே.செல்வமணியிடம் முதல்வர் வழங்கினார்

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2021      சினிமா
Image Unavailable

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் ‘‘புரட்சித் தலைவி அம்மா” படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் (பெப்சி) ஆர்.கே. செல்வமணியிடம் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் 26.8.2018 அன்று நடைபெற்ற திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழாவில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களது கோரிக்கையினை கனிவுடன் ஏற்று, முதலமைச்சர், புரட்சித் தலைவி அம்மாவின் பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் புரட்சித் தலைவி அம்மா படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு முதல் கட்டமாக தமிழ்நாடு அரசின் சார்பில் 16.9.2019 அன்று 1 கோடி ரூபாய்க்கான காசோலையும், 1.6.2020 அன்று இரண்டாம் கட்டமாக 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது மூன்றாம் கட்டமாக, அம்மாவின் பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் நேற்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து