முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்ப தலைவர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் : இயற்கை மரணத்துக்கு ரூ. 2 லட்சம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : விபத்தில் குடும்ப தலைவர் மரணமடைந்தால், அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று சட்டசபையில் பட்ஜெட்டில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இயற்கை மரணம் அடைந்தால் 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதனால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 55 லட்சத்து 67 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறுவார்கள் என்றும் இந்த திட்டத்திற்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தமிழக சட்டசபையில் நேற்று 2021- 22ம்  ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநில அரசு துவக்கி வைத்துள்ளது என்பதை இந்த அவைக்குத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இத்திட்டத்திற்கான முழு நிதியையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 55.67 லட்சம் தகுதியான குடும்பங்களுக்கு, குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

மேலும், குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையும், நிரந்தர இயலாமைக்கு 2 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும். 

நிவர் மற்றும் புரெவி ஆகிய 2 புயல்கள் மற்றும் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பருவம் தவறிப் பெய்த கனமழையால் தமிழ்நாடு தாக்கப்பட்டது. இதனால், பயிர்கள், உடைமைகள் மற்றும் பொதுச் சொத்துகள் பெருமளவில் சேதமடைந்தன. மொத்த சேதங்களை மதிப்பிட்டு, நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்காக 3,758.65 கோடி ரூபாயும், புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களுக்காக 1,514 கோடி ரூபாயும், 2021–ம் ஆண்டு ஜனவரி மாதம் பருவம் தவறிப் பெய்த கனமழை சேதங்களுக்காக 900.82 கோடி ரூபாயும் வழங்கக்கோரி மத்திய அரசிடம் கோரிக்கைமனு அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். மாநிலப் பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து கோவிட்-19 நிவாரண நடவடிக்கைகளுக்காக கணிசமான செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2020-21ம் ஆண்டின் மாநிலப் பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து இதுவரை மொத்தம் 11,943.85 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

மேலும், 2020–ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் அளித்த நன்கொடையிலிருந்து 200 கோடி ரூபாய் கோவிட்-19 நிவாரணப் பணிகளுக்கான செலவினங்களை மேற்கொள்வதற்காக, மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணைய நிதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.  இவ்வாறு, மாநிலப் பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட அதிக அளவிலான செலவினங்கள், 2020-21 மற்றும் 2021–22ம் ஆண்டுகளுக்காக, மாநிலப் பேரிடர் நிவாரண மற்றும் மேலாண்மை நிதிக்கு, மத்திய அரசின் பங்கு 1,020 கோடி ரூபாயுடன், தமிழ்நாட்டிற்காக 15-வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள தொகையான 1,360 கோடி ரூபாய் உண்மையில் போதுமான அளவில் இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. எனவே, தேசியப் பேரிடர் நிவாரண மற்றும் மேலாண்மை நிதியத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து