ஐதராபாத் : ஐ.பி.எல். போட்டியின் ஆட்டங்கள் ஐதராபாத்திலும் நடைபெற வேண்டும் என்று அம்மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இந்த வருட ஐ.பி.எல். போட்டிக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர், தில்லி, மும்பை ஆகிய ஆறு நகரங்களில் மட்டும் ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல். ஆட்டங்களை ஐதராபாத்திலும் நடத்த வேண்டும் என அம்மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது. தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமா ராவ், ட்விட்டரில் கூறியதாவது:
கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவின் பெருநகரங்களில் ஐதராபாத்தில் தான் குறைந்தளவு கரோனா நோயாளிகள் உள்ளார்கள். ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஐ.பி.எல். ஆட்டங்களை ஐதராபாத்திலும் நடத்த பிசிசிஐ முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சார்பாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பங்கேற்று வருகிறது.