முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பரிதாப பலி: பிரதமர் மோடி இரங்கல்

புதன்கிழமை, 28 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

உத்தரப் பிரதேச மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் சாலையில் பழுதடைந்த பேருந்து மீது லாரி மோதியதையடுத்து, பேருந்து நகர்ந்து வந்து சாலையில் உறங்கிய பயணிகள் மீது ஏறியதில் 18 பேர் பலியானார்கள். 25 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பாரபங்கி மாவட்ட போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:

பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே அம்பாலா நகரிலிருந்து 130 தொழிலாளர்கள் ஒரு பேருந்தில் பீகார் மாநிலத்துக்குப் புறப்பட்டனர். உத்தரப் பிரதேசம் பாரபங்கி மாவட்டம், கோட்வாலி ராமசேனா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது பேருந்து திடீரென பழுதானது. பேருந்தின் பழுதை ஆய்வு செய்த ஓட்டுநர்கள் பழுது நீக்க நீண்டநேரம் ஆகும் எனக் கூறி விட்டு சாலை ஓரத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு, மெக்கானிக்கைப் பார்க்கச் சென்று விட்டனர். பேருந்தில் இருந்த தொழிலாளர்களில் பலர் அருகே இருந்த மரத்தடியிலும், கட்டிடத்திலும் ஓய்வெடுத்தனர், சிலர் சாப்பிடச் சென்றனர். பலர் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் முன் படுத்துத் தூங்கினர்.

அப்போது சாலையில் வந்த டிரக் ஒன்று, திடீரென நின்றிருந்த பேருந்தின் பின்பகுதியில் பலத்த சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. லாரி இடித்த வேகத்தில், பேருந்து நகர்ந்து சென்று சாலையில் படுத்திருந்த பயணிகள் மீது ஏறியது. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் மீது பேருந்து ஏறியதில் பலர் தூக்கத்திலேயே உயிரிழந்தனர், ஏராளமானோர் படுகாயத்துடன் உயிருக்குப் போராடினர்.

இந்த விபத்தை அறிந்த மற்ற பயணிகள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டு பயணிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சாலையில் படுத்துத் தூங்கிய பயணிகளில் 18 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

பாரபங்கி மாவட்டத்தில் பேருந்து ஏறியதில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டசெய்தியில், பாரபங்கி சாலை விபத்துச் செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். முதல்வர் யோகியுடன் பேசினேன். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து