முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் நடத்த திட்டம்: நீட் தேர்வு விலக்கு மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 14 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா கவர்னருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கவர்னர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.  ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க. சொன்னதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், சட்டமன்ற முதல் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று சொன்னோம். நாங்கள் சொன்னதை செய்திருக்கிறோம். 

சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக அ.தி.மு.க. கொண்டு வந்த மசோதாவுக்கும், தி.மு.க. கொண்டு வந்துள்ள மசோதாவுக்கும் வித்தியாசம் உள்ளது.  நீட் பாதிப்புகள் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கருத்து கேட்டது. அதன் அடிப்படையில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சட்ட நிபுணர்களின் கருத்துக்கள், உயர்மட்ட அதிகாரிகளின் கருத்துக்கள் இடம் பெற்று உள்ளன. களநிலவரம் நிச்சயமாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நிச்சயமாக ஜனாதிபதியும் புறந்தள்ளமாட்டார். தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள மசோதாவில் 86 ஆயிரம் பேர்களின் கருத்துக்கள், நீதிபதி ராஜன் கமிட்டியின் கருத்து போன்றவை இணைக்கப்பட்டு உள்ளன.  கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாம் போல வருகிற 17-ம்  தேதியும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார். 

மேலும் நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் விபரீத முடிவு எடுப்பதை தடுக்கவும் அவர்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலிங் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  நீட் தேர்வை எழுதிய ஒரு லட்சத்து 11 ஆயிரம் மாணவர்களையும் போனில் தொடர்பு கொண்டு கவுன்சிலிங் அளிக்கப்படும். இதற்காக மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு அறையில் மனநல ஆலோசகர்கள் அமர்ந்து இருப்பார்கள். அவர்கள் மாணவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி மனநல ஆலோசனை வழங்குவார்கள்.  நாளை சென்னையில் தொடங்கும். அதை தொடர்ந்து 38 மாவட்டங்களிலும் நடைபெறும். ஒரு வாரத்துக்குள் அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து