முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆணைவாரி அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு: சிக்கிய தாயையும், சேயையும் காப்பாற்றியவர்கள் அரசால் சிறப்பிக்கப்படுவார்கள்: முதல்வர் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஆணைவாரி அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கிய தாயையும், சேயையும் காப்பாற்றியவர்கள் அரசால் சிறப்பிக்கப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன்மலை தொடரில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இதை வனத்துறையினர் சுற்றுலா தலமாக பராமரித்து வருகின்றனர், படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி, வனப்பகுதியில் பொழுது போக்கும் வகையில் குடில், பூங்கா, மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விடுமுறை நாட்களில் ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள், இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர்.

அப்போது, கல்வராயன் மலை தொடர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த ஒரு பெண், குழந்தை உள்பட 5 பேர் சிக்கி கொண்டனர். அவர்களை வனத்துறையினர் மீட்டனர். அப்போது பாறை வலுக்கி இரண்டு வாலிபர்கள் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர். பின்னர் அந்த இரண்டு வாலிபர்களும் நீச்சலடித்து கரை சேர்ந்து உயிர் பிழைத்துள்ளனர். இதை நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். ஆணைவாரி அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்டவர்களுள் இருவர் ஆற்றில் தவறி விழும் பதைபதைக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெள்ளப் பெருக்கில் சிக்கிய தாய், குழந்தையையும் காப்பாற்றியவர்கள் அரசால் சிறப்பிக்கப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், பதைபதைக்கும் வீடியோவை பதிவிட்டு, தாயையும், சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால் சிறப்பிக்கப்படுவார்கள். தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது. பேரிடர்களின்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து