முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்தியக் குழு இன்று தமிழகம் வருகை : 2 குழுக்களாக சென்று 2 நாள் பார்வையிடுகிறார்கள்

சனிக்கிழமை, 20 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்தியக் குழுவினர் இன்று தமிழகம் வருகின்றனர். அவர்கள் இரு குழுக்களாக சென்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை 2 நாள் பார்வையிடவுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகில் கரையை கடந்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது.சென்னையில் பல வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. சாலைகளிலும், தெருக்களிலும் மழை வெள்ளம் ஆறுபோல ஓடியது. டெல்டா பகுதிகளில் பயிர்கள் மழை வெள்ளத்தால் மூழ்கின. மேலும் தொடர்ந்து பெய்த மழையால், தென் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். அந்த குழு அளித்த அறிக்கையின்படி மத்திய அரசுக்கான கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுவை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார்.

அதில், அக்டோபர் மாதத்தில் பெய்யும் சராசரி மழை அளவைவிட கூடுதலாக 52 சதவீத மழையும், நவம்பரில் பெய்யும் மழை அளவைவிட 49 சதவீதம் கூடுதலாகவும் மழை பெய்துள்ளது. இதனால் 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்களில் பயிர்கள், 526 ஹெக்டேர் தோட்டப்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும், மழையால் 54 பேர் மரணமடைந்துவிட்டனர். 9,600 குடிசைகளும், 2,100 வீடுகளும் சேதமடைந்துள்ளன. எனவே உடனடி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.550 கோடியும், முழுமையான நிவாரணமாக ரூ.2,079 கோடியும் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தொலைபேசியில் பேசி வெள்ள நிலைமை பற்றி கேட்டறிந்தார்.

அதையடுத்து, தமிழகத்தில் சேதங்களை நேரடியாக பார்வையிட உடனடியாக மத்திய குழுவை அனுப்பி வைப்பதாகவும், அதன் பிறகு தாக்கல் செய்யப்படும் அறிக்கையின் அடிப்படையில் பேரிடர் நிதி ஒதுக்கப்படும் என்றும் மத்திய மந்திரி அமித்ஷா உறுதி அளித்தார். அதன்படி, கடந்த 3 நாட்களுக்கு முன் மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்த மத்திய குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ராஜீவ் சர்மா தவிர, மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய வேளாண்மைத்துறை (ஐ.டி.) பிரிவு இயக்குநர் விஜய் ராஜ்மோகன், சென்னையில் உள்ள மத்திய நீர்வள அமைச்சகத்தின் நீர் ஆணையத்தின் இயக்குநர் ஆர்.தங்கமணி, டெல்லியில் உள்ள மத்திய எரிசக்தித்துறை உதவி இயக்குநர் பாவ்யா பாண்டே, சென்னையில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி ரணஞ்ஜெய் சிங், மத்திய ஊரக வளர்ச்சித்துறை சார்பு செயலர் எம்.வி.என்.வரப்பிரசாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இன்று சென்னைக்கு வரும் இக்குழுவினர், முதலில் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்கின்றனர். அதன்பின், 2 குழுக்களாக பிரிந்து மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு திரும்பியதும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசுகிறார்கள். பிறகு தாங்கள் ஆய்வு செய்த வெள்ள சேத விவரங்களை அறிக்கையாக மத்திய அரசிடம் தாக்கல் செய்வார்கள். இந்த விவரங்களின் அடிப்படையில் தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். தெரிவிக்கையில்., தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய அரசின் 7 பேர் கொண்ட குழு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க, நாளை (இன்று) வருகிறது. 

இந்தக் குழுவானது. 21.11.2021 அன்று சென்னை வந்தடைந்து, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலருடன் கலந்தாலோசிக்கிறது. பின்னர், இந்தக் குழு இரண்டு குழுக்களாக பிரிந்து, 22.11.2021 மற்றும் 23.11.2021 ஆகிய நாட்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. குழு 1 உறுப்பினர்கள் ராஜீவ் ஷர்மா, விஜய் ராஜ்மோகன், ரனன்ஜெய் சிங் ஆகியோர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்கள். இந்த குழுவை, வருவாய் நிர்வாக ஆணையர் பணிந்திர ரெட்டி ஒருங்கிணைப்பார்.

குழு 2 உறுப்பினர்கள் ஆர்.பி.கவுல், ஆர்.தங்கமணி,பாவ்யா பாண்டே ஆகியோர் கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்கள். இந்த குழுவை பேரிடர் மேலாண்மை துறை அரசு முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஒருங்கிணைப்பார். மேலும், மழை பாதிப்புகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் குறிப்பு எடுப்பார்கள். ஆய்வு முடிந்தவுடன் நவ.24 ம் தேதியன்று மத்திய குழுவினர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்கிறார்கள்.

மத்திய அரசின் ஆய்வுக்கு பின்னர் தொடர்புடைய குழு அலுவலர்களிடம் கலந்து ஆலோசித்து தமிழகத்தில் ஏற்பட்ட மழை சேத பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். மத்திய குழு வருகிறபோது, கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சியினரும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மழைப்பாதிப்பு குறித்து தெரிவிக்கவேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து