முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிராவான கான்பூர் டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவின் வெற்றியை தடுத்து நிறுத்திய 2 முக்கிய நிகழ்வுகள்

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

இந்திய அணியின் வெற்றியை தடுத்த இரண்டு காரணங்களில் ஒன்று போதிய வெளிச்சம் இல்லாமை என்றாலும், மற்றொரு முக்கியமான காரணம் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திர மற்றும் அஜஸ் படேல் ஆகிய இரண்டு வீரர்களின் தடுப்பாட்டமே இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணம். 

165 ரன்கள்... 

284 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்திருந்தபோது வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் தோல்வியின் பிடியில் இருந்த நியூஸிலாந்து அணி இயற்கையின் உதவியால், தோல்வியிலிருந்து தப்பித்தது. ஆட்ட நாயகனாக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

13-வது போட்டி...

நியூஸிலாந்து தரப்பில் ரவிந்திரா 18, பட்டேல் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-0 என்ற கணக்கில் இரு அணிகளும் உள்ளன. இந்திய அணி கடந்த 1988 முதல் 1994-ம் ஆண்டுவரை உள்நாட்டில் நடந்த 13 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து முடிவு கிடைத்தவாறு இருந்தது. அதற்கு அடுத்தாற்போல், 2018-ம் ஆண்டு முதல் 2021, மார்ச் 4-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி வரை 12 போட்டிகளிலும் முடிவு கிடைத்தது. 13-வது டெஸ்ட் போட்டியிலும் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோது, இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

284 ரன்கள் இலக்கு...

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 345 ரன்களுக்கும், நியூஸிலாந்து அணி 296 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 284 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. 4-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் இருந்த சோமர்வில்லே, டாம் லாதம் நேற்று கடைசி நாள் ஆட்டத்தைத் தொடங்கினர்.

உமேஷ் யாதவ்... 

இருவரும் இந்தியப் பந்துவீச்சாளர்களை சோதிக்கும் வகையில் பேட் செய்ததால் விக்கெட் வீழ்த்த முடியாமல் இந்தியப் பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர். சோமர்வில்லே 36 ரன்கள் சேர்த்திருந்தபோது, உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 76 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அஸ்வின் பந்துவீச்சு...

அடுத்து ரோஸ் டெய்லர் களமிறங்கி லாதமுடன் சேர்ந்தார். அரை சதத்தைக் கடந்து ஆடி வந்த லாதம் 52 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். 118 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து அணி அதன்பின் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. ரோஸ் டெய்லர் 2 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அதைத் தொடர்ந்து வந்த நிகோலஸ் ஒரு ரன்னில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். நிலைத்து ஆடிவந்த கேப்டன் வில்லியம்ஸன் 24 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பெவிலியன் திரும்பினார்.

நியூசி.க்கு நெருக்கடி...

பிளன்டெல் (2), ஜேமிஸன் (5) சவுதி (4) என ஜடேஜாவின் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தனர். 118 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூஸிலாந்து அணி அடுத்த 37 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளைச் சீரான இடைவெளியில் இழந்தது. கடைசி விக்கெட்டை இந்திய அணி வீழ்த்தினால் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் என்ற ஆர்வத்தில் இந்திய அணியினர் நெருக்கடி கொடுத்தனர். ஆனால், வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் கடைசி சில ஓவர்கள் முன்பாகவே முடிக்கப்பட்டது. இதனால் முதல் டெஸ்ட் போட்டி எந்த முடிவும் இன்றி டிராவில் முடிந்தது. 

ஜடேஜா - அஸ்வின்...

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கடைசி செஷனில் சிறப்பாகச் செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியும் இயற்கையின் தடையால் வெற்றிபெற முடியவில்லை. இந்தியத் தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து இந்திய அணியின் பவுலர்கள் அக்சர் பட்டேல் 6 விக்கெட், அஷ்வின் 6 விக்கெட், ஜடேஜா 5 விக்கெட், உமேஷ் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். அனுபவ வீரர் இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. 

2 முக்கிய காரணங்கள்

இந்திய அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட ஒரு விக்கெட்டை இந்திய அணியின் பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. கடைசி நாள் ஆட்டத்தில் முதல் செஷனில் இந்திய அணியால் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனது போட்டி சமனில் முடிய முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்திய அணியின் வெற்றியை தடுத்த இரண்டு காரணங்களில் ஒன்று போதிய வெளிச்சம் இல்லாமை என்றாலும், மற்றொரு முக்கியமான காரணம் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திர மற்றும் அஜஸ் படேல் ஆகிய இரண்டு வீரர்களின் தடுப்பாட்டமே இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணம்.

மேலும் நியூசிலாந்து அணி கடைசியாக விளையாடிய பத்து டெஸ்ட் போட்டிகளில் (இந்த போட்டியையும் சேர்த்து) ஒன்றில் கூட தோல்வி அடையவில்லை. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் ஆட்டம் முன்கூட்டிய முடித்துக் கொள்ளப்பட்டது. ஒருவேளை நேற்றைய நாள் ஆட்டத்தில் எஞ்சியிருந்த ஓவர்களை இந்திய அணி வீசி இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து