முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்: தமிழக அரசின் மருத்துவத் துறைக்கு நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் : 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில் பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும்  செம்மொழித்  தமிழாய்வு  மத்திய நிறுவனத்திற்கான புதிய  கட்டிடம்  ஆகியவை காணொலிக் காட்சி வாயிலாக  பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

தனது பல்வேறு பணிகளுக்கிடையே தமிழக மக்களின், குறிப்பாக, மாணவர்களின் நலனை மனதில் கொண்டு இந்தச் சிறப்பான நிகழ்ச்சிக்கு தங்களின் நேரத்தை ஒதுக்கித் தந்தமைக்காக, பிரதமருக்கு  நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இன்று நமது நாட்டிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிக அதிக எம்.பி.பி.எஸ். இடங்களையும், மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் கொண்டு மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி வரும் மத்திய அரசுக்கும், குறிப்பாக, பிரதமருக்கும் எனது மனமார்ந்த நன்றி. 

அதேநேரத்தில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மாநில அரசிற்குத் தங்களது அரசு தொடர்ந்து உதவி அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மட்டுமன்றி, மக்களுக்குப் பயன் தரும் மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், தமிழக அரசு, நாட்டிற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளது. புதுமையான திட்டங்களைத் தீட்டி, சிறப்புறச் செயல்படுத்தும் தமிழக அரசின் மருத்துவத் துறைக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடுகள் மேலும் உயர்த்தப்பட வேண்டும். பல மாநிலங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவி வரும் இச்சூழலில், தமிழகத்தில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் கிராமப்புறங்களிலும் அரசுத் துறையிலும் சிறப்பாக சேவை செய்வதற்கு தமிழக அரசின் மாணவர் சேர்க்கை கொள்கையே அடிப்படையாகும். இந்த அடிப்படைக் கொள்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே மாணவர் சேர்க்கை முறை தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றித் தர வேண்டும். 

இந்த நாளில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தைத்  திறந்து வைத்திருக்கிறீர்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின்போது தமிழுக்கு இத்தகைய சிறப்பு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து