முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கே.பி. அன்பழகனின் வீட்டில் ரெய்டு: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். கடும் கண்டனம்

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தி.மு.க. அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கோரக் கரங்களை மீண்டும் ஒருமுறை நீட்டி இருக்கிறது தி.மு.க. அரசு. மக்கள் நலன் சார்ந்த எந்த விஷயத்திலும் முனைப்பு காட்டாத தி.மு.க அரசு, அரசியலில் தனக்கு மிகப்பெரிய பின்னடைவு வருகின்ற போது, அதனை மறைத்து அரசியல் சூழ்நிலைகளை திசை திருப்ப முயற்சிக்கிறது. தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், பி.தங்கமணி உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் சோதனை என்ற பெயரில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டாலும், சோதனை முடிந்து வெளியே வரும் போது லஞ்ச ஒழிப்புத்துறை வெறுங்கையோடுதான் திரும்பி இருக்கிறது. 

தற்போது முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் நடவடிக்கைதான் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. எம்.ஜி.ஆர் வழிவந்து அவரின் பாசறையில் பயின்றவர்கள் நாங்கள்.  நீங்கள் நடத்தக்கூடிய ஒவ்வொரு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் நாடகமும் எங்களுக்கும், எங்கள் இயக்கத் தலைவர்களுக்கும், இந்த இயக்கத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் மேலும் வலுவும், உரமும் ஊட்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.  தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தாமல், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீதும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீதும் பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருவதற்கு எங்களது கண்டனங்கள். இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து