முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் நிகழ்ந்த சோகம்: கெட்டுப்போன உணவை உண்ட 3 சிறுவர்கள் பலி விசாரணை நடத்த 3 குழுக்கள் அமைப்பு

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      தமிழகம்
Vivekanantha-Sevaalayam 2022-10-06

Source: provided

திருப்பூர்: திருப்பூரில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் கெட்டுப்போன உணவை உட்கொண்ட 3 சிறுவர்கள் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மரணம் தொடர்பாக 3 விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

திருப்பூர் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் உள்ள விவேகானந்தா சேவாலயம் ஆதரவு எற்போர் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதை செந்தில்நாதன் என்பவர் நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தக் காப்பகத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் அம்மாபாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு தினந்தோறும் உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இவர்களுக்கு ரசம் சாதம் இரவு உணவாக வழங்கப்பட்டுள்ளது. அதை சாப்பிட்ட 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பணியில் இருந்த வார்டன் ஒரு சில சிறுவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், நேற்று காலை 10-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற நான்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் அதில் இருந்த மருத்துவர்கள், சிறுவர்களின் நிலையை கண்காணித்து உடனடியாக சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். 

காப்பகத்தில் குழந்தைகளை மருத்துவர்கள் பரிசோதிக்கும்போது அங்கு மாதேஷ் மற்றும் அத்திஸ் ஆகிய இரண்டு சிறுவர்கள் ஏற்கெனவே இறந்து இருப்பது தெரியவந்தது. மேலும், கவலைக்கிடமாக இருந்த பாபு என்ற சிறுவனும், உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

காப்பகத்தில் இருந்து சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட 9 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்பொழுது அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே திருப்பூர் விடுதியில் 3 சிறுவர்கள் உயிரிழந்தது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று திருப்பூர் காவல் ஆணையர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விடுதியில் விசாரணை மேற்கொண்ட பின், திருப்பூர் காவல் காணையர் பிரபாகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நேற்று முன்தினம் காலை இட்லி, சட்னி, வெண்பொங்கல், கொண்டைக்கடலை குழம்பு உட்கொண்டனர். உணவு சாப்பிட்ட அனைத்து மாணவர்களுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உணவு சாப்பிட்டதால் காய்ச்சல் ஏற்பட்டதா? என்பது குறித்து மருத்துவ அறிக்கை வந்த பின்பே தெரியும். சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அக்டோபர் 4ம் தேதி சிறுவர்களுக்கு சுண்டல், பொரி கடலை, லட்டு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்ததால் நேற்று முன்தினம் வெறும் ரசம் சாதம் மட்டுமே கொடுத்துள்ளனர். கொடுக்கப்பட்ட ரசம் சாதத்தில் மாணவர்கள் வெறும் ரசத்தை மட்டுமே குடித்துவிட்டு சாதத்தை கீழே போட்டுள்ளனர். மாணவர்களின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில், திருப்பூரில் காப்பக குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் அம்மாவட்ட கலெக்டர் வினீத் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், காப்பகத்தில் நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்ட 14 சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். விடுதியில் வழங்கப்பட்ட உணவு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் தான் சிறுவர்கள் இறப்புக்கான காரணம் தெரியும் என்று கூறினார்.

இந்தநிலையில் குழந்தைகள் மரணம் தொடர்பாக 3 விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் தலைமையில் ஒரு குழுவும், மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரி ரஞ்சித பிரியா தலைமையில் ஒரு குழுவும், சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு பிறகு சமூக நலத்துறையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். குழந்தைகள் மரணத்திற்கு காரணமாக யார் இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து