முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தினவிழா: தமிழ்நாட்டின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம்

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      தமிழகம்
Gram-Sabha 2023 01 25

Source: provided

சென்னை : குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாட்டின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. 

நாடு முழுவதும் குடியரசு தினவிழா இன்று 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பை ஏற்பார். இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாக நடைபெறும். ஆனால், தற்போது அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், இந்தாண்டு குடியரசு தினவிழா கொண்டாட்டம் இன்று காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது. 

இந்த நிலையில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவை குறித்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  ஜனவரி 26-ம் தேதி காலை 11 மணியளவில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தின் போது கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போன்றவைகள் குறித்து விவாதிக்கப்படும்.

அதன் பிறகு தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயிர்கல்வி உறுதி திட்டம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படும். 

மேலும் கிராம நிர்வாக அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வைப்பதோடு பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக பிளக்ஸ் பேனரிலும் வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து