முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல், ரஞ்சிப் போட்டியைப் போல் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பிலும் அபாரமாக விளையாடுவேன் : அஜிங்கிய ரஹானே நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2023      விளையாட்டு
Rahane 2023-06-04

Source: provided

போர்ட்ஸ்மவுத் : ஐபிஎல், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது போன்று உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பிலும் அபாரமாக விளையாடுவேன் என்று இந்திய அணி வீரர் அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதில் வெல்லும் அணி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றும்.
போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் லண்டன் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்திய அணி வீரர் ரஹானே போர்ட்ஸ்மவுத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
18 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் நான் இடம் பிடித்துள்ளேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியில் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சி. இத்தனை நாள் அணியில் இடம்பெறாமல் போனதற்காக வருத்தப்படப் போவது இல்லை. நடந்தவை நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி, கடந்த காலத்தைப் பற்றி நினைக்கப் போவது இல்லை. நான் புதிதாக ஆரம்பித்து என்ன செய்துகொண்டிருந்தேனோ அதைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்.
சமீபத்தில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினேன். அதற்கு முன்பாக ரஞ்சிக் கோப்பை போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன் குவித்ததால் அதிக நம்பிக்கை கிடைத்துள்ளது. அந்தப் போட்டிகளில் விளையாடியது போன்றே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் எனது ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடியதில் எனக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சி. இந்த சீசன் முழுமையாகவும் நான் எனது இயல்பான ஆட்டத்தை விளையாடினேன். தற்போதுள்ள இந்திய அணியில் உள்ள கலாசாரம் சிறப்பாக இருக்கிறது. அணியை கேப்டன் ரோஹித்சர்மா சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார். ஒவ்வொரு வீரரும் தனித்தன்மையுடன் இருக்கின்றனர்.
நான் தேசிய அணியில் இடம்பெறாத நிலையில், எனக்காக ஆதரவு காட்டிய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் நன்றி. நான் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கடினமாக உணர்ந்தேன். எனது குடும்பத்தாரின் ஆதரவுடன் மீண்டு வந்தேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை அணிக்குத் தேர்வுசெய்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் (பிசிசிஐ), தேர்வுக் குழுவினருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுவரை 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே4,931 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் 2021-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரஹானே இந்திய அணிக்குத் தலைமை தாங்கி தொடரையும் வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து