முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் பேசியதை தமிழகத்தில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025      தமிழகம்
Stalin 2022 12 29

தர்மபுரி, பீகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணியின் மகன் பிரகதீஸ்வரன் - மது பிரதிக்சா ஆகியோரது திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் இந்த விழாவில் அவர் அவர் பேசியதாவது;-

தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அருமை சகோதரர் மணி – புவனேஸ்வரி தம்பதியரின் மகன் பிரகதீஸ்வரன், மற்றும் கோவிந்தன் – சுகுணா தம்பதியரின் அருமை மகள் மது பிரதிக்சா ஆகியோரது மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து வாழ்த்தி அமர்ந்திருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

ஆ.மணியின் இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு, மணவிழா நிகழ்ச்சியை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆ.மணி 1987-ல் இருந்து கழக உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு களப்பணியாற்றிக் கொண்டு வருகிறார். வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், இவருடைய ஆற்றலைப் பார்த்து, 2016-ல் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளராக பொறுப்பேற்றுப் பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றார்.

அதனை தொடர்ந்து 2019-ல் நடைபெற்ற பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கழகத்தின் வேட்பாளராகவும் போட்டியிட்டிருக்கிறார். அதன் பிறகு, 2020 முதல் 2022 வரை மாவட்டப் பொறுப்புக் குழுவின் உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார். 2023-ல் தருமபுரி மேற்கு மாவட்டத் துணைச் செயலாளராக தனது பணியை தொடர்ந்து நிறைவேற்றி இருக்கிறார். இப்போது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றைக்கு நாடாளுமன்றத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல, இன்றைக்கு தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். மக்கள் பணியும், கழகப் பணியும் இந்த இரண்டு பணிகளையும் அவர் சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

நேற்றைய தினம், மிக முக்கியமான தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சென்னையில் நடத்தி முடித்துவிட்டு, நானும், திருமாவளவனும், மற்றவர்களும் இன்றைக்கு வந்திருக்கிறோம். நேற்று நாம் அந்தக் கூட்டத்தைக் கூட்டி பல்வேறு கருத்துக்களை, ஆலோசனைகளை எல்லாம் வழங்கி இருக்கிறோம். முக்கியமான தீர்மானத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். அடுத்த ஆண்டு நாம் எதிர்கொள்ள இருக்கக்கூடிய தமிழ்நாடு தேர்தலை அடிப்படையாக வைத்து வாக்காளர் பட்டியலில், ஏற்பட்டிருக்கக்கூடிய SIR என்ற ஒரு திட்டத்தை அவர்கள் மையப்படுத்தி, சீராய்வு என்ற பெயரில், சூழலில், ஒரு தீய செயலை, ஒரு சதிச் செயலைச் செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. அதை தடுப்பதற்கான முயற்சியில், நம்முடைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து பேசி தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், முழுமையான திருத்தப் பணிகள் செய்ய தேர்தல் ஆணையம் நினைக்கிறது. அதற்குக் காரணம், உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் அது! அதைத்தான் பீகார் மாநிலத்தில் செய்தார்கள்; இப்போது மற்ற மாநிலங்களிலும் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்தத்தான் நாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்றைக்குக் கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.

நாம் நடத்திய கூட்டத்திற்கு கூட இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க. அதில் பங்கேற்கவில்லை. இன்னும் ஓரிரு கட்சிகள் அதில் பங்கேற்கவில்லை. தேர்தல் ஆணையத்தில், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதற்காக நான் உள்ளபடியே அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி, இதில்கூட தன்னுடைய இரட்டை வேடத்தைக் காட்டியிருக்கிறார். பா.ஜ.க.,வுக்கு பயந்து, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்கப் பழனிசாமி பயப்படுகிறார். அதேநேரத்தில், அ.தி.மு.க. தொண்டர்களுக்காக ஒரு அறிக்கையையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இன்றைக்கு பத்திரிகைகளிலும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

இது எதை காட்டுகிறது? தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில், பழனிசாமிக்கு சந்தேகம் இருப்பதைத்தான் அது காட்டுகிறது! ஆனால், அவரால் வெளிப்படையாக இதை எதிர்க்க முடியவில்லை. தான், “பா.ஜ.க.,வின் பாதம்தாங்கி பழனிசாமி” என்பதை நொடிக்கு ஒருமுறை அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். நான் உறுதியாக சொல்கிறேன், பா.ஜ.க. எப்படிப்பட்ட சதிச்செயலைச் செய்தாலும், அவர்களால் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது என்பதை அழுத்தந்திருத்தமாக நான் குறிப்பிட விரும்புகிறேன். தங்களுடைய திட்டங்கள் தமிழ்நாட்டில் எதுவும் எடுபடவில்லை என்ற ஆத்திரத்தில்தான் பிரதமர் மோடி தமிழ்நாட்டைக் காட்டி பீகாரில் வெறுப்புப் பேச்சைப் பேசியிருக்கிறார்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டை” எல்லோரிடமும், சகோதரத்துவத்துடன் பழகும் நம்மைப் பற்றி, இந்த மண்ணில் வாழுகின்ற எல்லோருக்கும் நன்றாக தெரியும். கடந்த 1-ந்தேதி வெளியான தினத்தந்தி நாளிதழில் கூட, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அளித்த பேட்டியை நீங்கள் எல்லாம் பார்த்திரருப்பீர்கள் – அதையெல்லாம் பார்க்கும்போது, எனக்கே பெருமையாக இருக்கிறது. தமிழ்நாடு எப்படியெல்லாம் தங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது – தங்களுடைய வாழ்க்கைத்தரத்தை எப்படியெல்லாம் உயர்த்தியிருக்கிறது என்று மிகத் தெளிவாக பீகார் மக்கள் தமிழ்நாட்டில் வந்து பணிபுரியக்கூடிய, தொழில் செய்து கொண்டிருக்கக்கூடிய, வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அந்த பீகார் மக்கள் பேசியிருக்கிறார்கள்.

ஆனால், பிரதமர் பீகாரில், வாக்கு அரசியலுக்காக அங்கு சென்று நாடகத்தை நடத்தியிருக்கிறார். நான் கேட்கிறேன், பிரதமர் மோடி பீகாரில் பேசிய அதே கருத்தை, இங்கே தமிழ்நாட்டில் வந்து பேச முடியுமா? பேசுவாரா? பேசக்கூடிய தைரியம் இருக்கிறதா? என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை பரப்பினாலும், எவ்வளவு போலிச் செய்திகளை உருவாக்கினாலும், நான் தெளிவோடு சொல்கிறேன், 2026-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி நிச்சயம் அமையும். அன்றைக்கு அனைத்து சேனலிலும் “திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தது”! என்ற செய்திதான் வரப்போகிறது! அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். தமிழ்நாட்டு மக்கள் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையின் காரணமாக இதை நான் தெளிவோடு சொல்ல விரும்புகிறேன்.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில், மணமக்களிடம் நான் அன்போடு, உரிமையோடும், ஆ.மணியின் மீது நான் வைத்திருக்கக்கூடிய பாசத்தின் காரணமாகவும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்; தமிழுணர்வை தமிழகத்தில் உருவாக்குங்கள்; அதற்கு நீங்கள் உறுதி தரவேண்டும் என்று நான் இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொண்டு, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எடுத்துச் சொல்லி இருக்கக்கூடிய, “வீட்டிற்கு விளக்காய் - நாட்டிற்குத் தொண்டர்களாய்”மணமக்கள் அனைத்து நன்மைகளும் பெற்று வாழுங்கள்! என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து