முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

வியாழக்கிழமை, 5 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

காஞ்சிபுரம், ஜூலை6 -​250 ஆண்டுகளுக்கு பிறகு உலகப்பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் உள்பட லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 108 திவ்ய தேசங்களில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று காஞ்சிபுரம் தேவராஜசுவாமி (ஸ்ரீவரதராஜபெருமாள்) திருக்கோவில். அழகிய சிற்ப வேலைப்பாடுகள் சுவர் ஓவியங்கள் பழமையான கல்வெட்டுக்கள் போன்றவற்றை இந்த கோவில் கொண்டுள்ளது. இந்த கோவிலில் 2 ராஜகோபுரங்கள், பல சிறிய கோபுரங்கள் மற்றும் 5 பிரகாரங்களை கொண்டுள்ளது. முதலாம் ராஜராஜசோழனால் கி.பி.1018 -​1054​ம் ஆண்டில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.

காயத்திரி மந்திரத்தின் தத்துவத்தை விளக்கும் வகையில் 24 படிகள் கொண்ட அஸ்தகிரி என அழைக்கப்படும் திருமலையில் புண்ணியகோடி விமான மத்தியத்தில் நின்ற திருக்கோலத்தில் மூலவர் எம்பெருமாள் காட்சி தருகிறார். மேலும் கோவில் அமைந்துள்ள நிலப்பரப்பு 24 ஏக்கர். கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தின் படிகட்டுகள் 24. கொடி மரத்தில் உள்ள அடுக்குகள் 24. மதில் சுவரில் உள்ள கற்களின் அடுக்குகள் 24 ஆகும். கோவில் வளாகத்தில் 14 ஏக்கர் பரப்பில் 3 தோட்டங்கள் உள்ளன. அனந்தசரஸ் மற்றும் பொற்றாமரை என்ற 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன. பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் நகைகள் பெருமாளுக்கு சொந்தமாக உள்ளன. பெரிய தேர், 45 சிலைகள் கோவிலுக்கு சொந்தமாக உள்ளன. தற்போது இந்த கோவிலில் 5 கால பூஜை நடந்து வருகிறது.

இப்படி பல வரலாற்று சிறப்புகளையும் புகழையும் பெற்ற இந்த கோவிலில் முழுமையாக கும்பாபிஷேகம் நடந்து 250 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று கூறப்படுகிறது. இது பக்தர்களிடையே மனக்குறைவை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே இந்த குறையை போக்க வரதராஜ பெருமாள் கோவிலில் முழுமையாக திருப்பணி செய்ய கடந்த 2007​ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பணிக்காக ரூ.1 கோடியே 12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிதியை வைத்தும் நன்கொடையாளர்களிடம் இருந்து பெற்ற பல கோடி ரூபாய் நிதியை வைத்தும் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பெருந்தேவி தாயார் சன்னதிக்கு தங்க விமானம் உருவாக்கும் திருப்பணி சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டிலும், கிழக்கு ராஜ கோபுரம் மற்றும் மேற்கு ராஜ கோபுர திருப்பணிகள் ரூ.1.15 கோடி மதிப்பீட்டிலும் 100 கால் மண்டபம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும் புனரமைக்கப்பட்டன. கோவில் கிழக்கு ராஜகோபுர வாசல் 150 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டு புதிய வாசல் கதவுகள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட உள்ளன.

அதுமட்டும் அல்லாமல் மூலவர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, தொண்டரடி பொடியாழ்வார் பிரகாரம் பல சிறிய சன்னிதிகள் பிரகாரங்கள் விமானங்கள் திருப்பணி செய்யப்பட்டுள்ளன. திருப்பணிக்கான மொத்த மதிப்பீடு சுமார் ரூ.30 கோடி என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் திருப்பணிகள் முழுமையாக முடிவடைந்ததாகவும் கோவிலில் கும்பாபிஷேகம் ஜூலை 5-ந்தேதி நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி நேற்று 5-ந்தேதி காலை 11 மணிக்கு உலகப்பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் (ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம்) வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடந்தது.

முன்னதாக கோவில் வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கும்பாபிஷேக அங்குரார்ப்பணம் நடந்தது. 2-ந்தேதி முதல் 5​ந்தேதி வரை 4 நாட்களுக்கு யாகசாலை பூஜைகள் நடந்தன. பூஜையில் அமிர்தவள்ளி தாயார் எம்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். புரணாஹுதி தீர்த்தம் சடாரி 81 கலச திருமஞ்சனம் ஆகியவை நடந்தன. நேற்று காலை 6 மணிக்கு 4-ம் நாள் யாகசாலை பூஜை தொடங்கியது. ஸ்ரீபெருமாள் நித்யபடி திருவாராதனம் நிவேதனம் நடந்தது. 8 மணிக்கு ஸ்ரீபெருமாள் ஸ்ரீதாயார் யாகசாலைக்கு எழுந்தருளினர். அங்கு துவார கும்ப மண்டல திருவாராதனம் நிவேதனம், பெருமாள் திருவாராதனம் ஹோமங்கள் நடந்தன. 10.30 மணிக்கு மஹா பூரணாஹுதி யாத்ராதானம் கும்பங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணியிலிருந்து 12 மணிக்குள்ளாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேற்கு ராஜ கோபுரம் கிழக்கு ராஜ கோபுரம் தாயார் தங்க விமானம் புண்ணியக்கோட்டி விமானம் 100 கால் மண்டபம் மூலவர் சன்னதி சக்கரத்தாழ்வார் சன்னதி தொண்டரடி பொடியாழ்வார் பிரகாரம் பல சிறிய சன்னிதிகள் பிரகாரங்கள் விமானங்கள் மீது பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை ஊற்றி அர்ச்சகர்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். அப்பொது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சி வரதா... காஞ்சி வரதா... கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பினர். கும்பாபிஷேக புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

கும்பாபிஷேகம் முடிந்ததும் பெருமாள் தாயாருடன் கண்ணாடி அறையில் எழுந்தருளினார். அங்கு திருவாராதனம் நிவேதனம் வேதப்ரபந்த சாத்துமறை தீர்த்தம் சடாரி கோஷ்டி ஆகியவை நடந்தன. மாலையில் கோவில் மாட வீதிகளில் பெருமாள் வலம் வந்தார். இதனைத்தொடர்ந்து இரவு பெருமாள் திருமலைக்கும் தாயார் சன்னதிக்கும் எழுந்தருளினர். 

ஸ்ரீஅஹோபில மடம் செலவு ஏற்பு!

கும்பாபிஷேகத்திற்கான அனைத்து செலவுகளையும் ஸ்ரீஅஹோபில மடம் 45-வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர ஸ்ரீலஷ்மி நரசிம்ம திவ்ய பாதுகாசேவக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீநாராயண யதீந்திர மகா தேசிகன் 46​வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர ஸ்ரீலஷ்மி நரசிம்ம திவ்ய பாதுகாசேவக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மகா தேசிகன் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரம் எம்.எல்.ஏ. உத்திரமேரூர் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன், மத்திய எஃக்கு வாரிய உறுப்பினர் ஆர்.வி.ரஞ்சித்குமார், ஸ்ரீஅஹோபில மடம் 45​வது பட்ட ஜீயரின் பேரன்கள் சேஷாத்திரி சம்பத் வரதராஜன் வக்கீல்கள் வாசுதேவன் ரேவதி, அதிமுக நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், எஸ்.ரங்கநாதன், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வி.வள்ளிநாயகம், அத்திவாக்கம் எஸ்.ரமேஷ், ராஜசிம்மன், தென்னேரி என்.எம்.வரதராஜுலு, படுநெல்லி வி.தயாளன், தொழிலதிபர்கள் எம்.வி.எம்.பி.அப்பர், வி.கே.தாமோதரன், ஆர்.சரவணன், ஆர்.கணேஷ், வி.பன்னீர்செல்வம், கவிஞர்.கூரம்.துரை, மெடிக்கல்.பி.தீனா, கே.வீரராகவன், கோவில் நிர்வாக அதிகாரிகள் பு.மு.வேதமூர்த்தி, கண்ணபிரான் வேலரசு வி.கே.சரவணன் உள்பட திரளான பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் ப.ராஜா காஞ்சீபுரம் உதவி ஆணையர் வீ.சுந்தரமூர்த்தி வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாக அறங்காவலரும் உதவி ஆணையருமான என்.தியாகராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் அர்ச்சகர்கள் நன்கொடையாளர்கள் பக்தர்கள் வெகு விமர்சையாக செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) கணேசமூர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரன் ஆகியோர் தலைமையில் கூடுதல் சூப்பிரண்டு வி.பாஸ்கரன், துணை சூப்பிரண்டு வி.சந்திரசேகரன் மேற்பார்வையில் காஞ்சிபுரம் திருவள்ளூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் வேலூர் ஆகிய 6 மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

உள்ளூர் அரசு விடுமுறை!

வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நேற்று (5.7.12) ஒரு நாள் உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வருகிற 14​ந்தேதி பணி நாளாக அறிவித்து கலெக்டர் ஹனீஷ்சாப்ரா உத்தரவிட்டிருந்தார்.

உலகப் பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் திருப்பணிகள் முடிவடைந்தது. ஏறத்தாழ 250 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

அர்ச்சகர்களை கொட்டிய தேனீக்கள்:

 

வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பழமைவாய்ந்த கிழக்கு ராஜ கோபுர (பின்பக்க கோபுரம்) கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்வதற்காக அர்ச்சகர்கள் தேவராஜன் சேஷாத்திரி ஆகியோர் புனித நீர் கொண்ட கலச கும்பங்களை தூக்கிக் கொண்டு கிழக்கு ராஜ கோபுரத்தின் மீது ஏறி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கோபுரத்தின் 5-வது நிலை உள்பகுதியில் இருந்த தேனீக்கள் அர்ச்சகர்களை பயங்கரமாக கொட்டியது. இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல் அர்ச்சகர்கள் கோபுரத்தின் மீது ஏறி கலசங்கள் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பிறகு கீழே இறங்கி வந்த அவர்கள் தங்களை தேனீக்கள் கொட்டியது குறித்து சக அர்ச்சகர்களிடமும் உதவி ஆணையர் வீ.சுந்தரமூர்த்தியிடமும் தெரிவித்தனர். பிறகு அவர்கள்  மருத்துவ குழுவினரிடம் சிகிச்சை பெற்றனர். ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago