முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்சாரி மீண்டும் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.12 - ஹமீத் அன்சாரி நேற்று இரண்டாவது முறையாக துணை ஜனாதிபதி பதவியை ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தார். ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைந்ததால் அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெற்றிபெற்று புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டுளக்ளார். அதற்கு பிறகு துணைஜனாதிபதி பதவிக்காலமும் முடிவடைந்தது. அதனையொட்டி புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. துணை ஜனாதிபதி தேர்தலிலும் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதனையொட்டி துணைஜனாதிபதி பதவிக்கும் போட்டி ஏற்பட்டது.  

துணை ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக ஏற்கனவே துணைஜனாதிபதியாக இருந்த ஹமீத் அன்சாரியும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் ராணுவ அமைச்சருமான ஜஸ்வந்த் சிங்கும் போட்டியிட்டனர். தேர்தல் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இதில் 252 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஹமீத் அன்சாரி வெற்றிபெற்றார். பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. ஹமீத் அன்சாரிக்கு புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் இதர கட்சி தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். ஹமீத் அன்சாரி இரண்டாவது முறையாக துணை ஜனாதிபதி பதவியை ஏற்றுள்ளார். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு பிறகு ஹமீத் அன்சாரிதான் தொடர்ந்து இரண்டாவது முறையாக துணைஜனாதிபதி பதவியை ஏற்றுள்ளார். பதவி ஏற்பதற்கு முன்பு காந்தி சமாதிக்கு அன்சாரி சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து துணைஜனாதிபதியாக அன்சாரி இருந்து வருகிறார். சிறந்த கல்விமான். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்சில் மற்றும் பல நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றி உள்ளார். ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றி உள்ளார். தேசிய சிறுபான்மையினர் கமிஷன் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்