முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் ஆட்சேபனை இல்லை

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜன.17 - கச்சத்தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று இலங்கை மீனவர் கூட்டமைப்பு டெல்லியில் தெரிவித்துள்ளது. 

1974_ம் ஆண்டு தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோதுதான் இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டது. மத்திய அரசின் அந்த முடிவுக்கு அன்றைய முதல்வர் கருணாநிதியும் துணைபோனதாக இன்று அளவிலும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட நாளில் இருந்து தமிழக மீனவர்களுக்கு ஒரே பிரச்சினையாக இருக்கிறது. அவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினரால் அவர்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் படகுகள் பறிக்கப்படுவதும் தொன்றுதொட்டு நடந்து வரும் ஒரு வேதனை கதையாகவே மாறிவிட்டது. மீனவர்களை கண்ணீரில் பிழைக்க வைத்தான்  என்று எம்.ஜி.ஆர். பாடியதைப்போல அவர்கள் படும்பாடு சொல்லி மாலாது.இந்த பிரச்சினையை தீர்க்க முதல்வர் ஜெயலலிதா சுப்ரீம்கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் கச்சத்தீவை தாரை வார்த்தது சட்ட விரோதம் என்று அறிவிக்கக்கோரி அவர் இந்த வழக்கை தொடர்ந்தார். இதில் தமிழக அரசும் தன்னை இணைத்துக்கொண்டு சில ஆவணங்களையும் சுப்ரீம்கோர்ட்டில் சமர்ப்பித்தது. இப்படி மீனவர்களுக்காக அரும்பாடுபட்டு வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. சமீபத்தில் கூட அனனத்து தமிழக மீனவர்களும் இலங்கை சிறையில் இருந்து விடுதலையாகுவதற்கு அவர் அடுத்தடுத்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இந்தநிலையில் டெல்லி வந்துள்ள இலங்கை மீனவர் கூட்டமைப்பின் தலைவர் ஆல்பர்ட் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய அவர், இருநாட்டு மீனவர்களின் நலன் கருதி கச்சத்தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தார். இதனால் கச்சத்தீவு பிரச்சினையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்