முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர் மருத்துவக் கல்வியை தொடர நிதி உதவி

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.13 - ஏழ்மை நிலையிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த போதிலும் தனது படிப்பை தொடர துன்பப்பட்ட நாமக்கல் மாவட்ட மாணவர் ஏ.பாஸ்கரன் தனது கல்வியை தொடரவும், தொடர்ந்து 4 ஆண்டுகள் படிப்பை தொடர தேவையான நிதி உதவிகளையும் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று (12.12.2011  திங்கட் கிழமை), எழ்மை நிலையால் மருத்துவக் கல்வி பயில சிரமப்படும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் பா. கோபிநாத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து 73,000/​ ரூபாய் நிதியுதவியினை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, கோழிக்கால்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஏ. பாஸ்கரன் ​ இட்லி வியாபாரம் செய்யும் சிவகாமி ஆகியோரது மகன் மாணவன் பா. கோபிநாத் வறுமை நிலையிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1171 மதிப்பெண்களும், மருத்துவப் படிப்பிற்கான கட்ஆஃப் மதிப்பெண் ஆக 199.75 பெற்றுள்ளார்.  மாணவன் கோபிநாத் மருத்துவப் படிப்பு பயில, சென்னை மருத்துவக் கல்லூரியில் மிகுந்த சிரமத்திற்கிடையே சேர்ந்த போதிலும், குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து தனது படிப்பை தொடர முடியாமல் சிரமப்பட்டு வருவதாக, முதல்வர் ஜெயலலிதா பத்திரிகை வாயிலாக அறிந்தார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமா ஜெயலலிதா எந்த ஒரு மாணவ, மாணவியும் கல்வி பயில்வதற்கு நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, தாய் உள்ளத்துடன் தனிப்பட்ட முறையிலும், அறக்கட்டளைகள் மூலமாகவும் நிதியுதவி வழங்கி, மாணவ, மாணவியர்களின் வாழ்க்கையில் கல்வி ஒளியேற்றி வருகிறார்.  அதன் அடிப்படையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமானஜெயலலிதா நேற்று (12.12.2011  திங்கட் கிழமை), நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, கோழிக்கால்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் பா. கோபிநாத்தை நேரில் வரவழைத்து, அவர் தொடர்ந்து மருத்துவக் கல்வி பயில, கல்விக் கட்டணம், பாடப் புத்தகங்கள், உணவுக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உட்பட முதல் வருடக் கட்டணத் தொகையான 73,000/​ ரூபாயை வழங்கினார்.  மேலும், மாணவன்  கோபிநாத் மருத்துவக் கல்விப் படிப்பு முடியும் வரை உள்ள அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம், பாடப் புத்தகங்கள், உணவுக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணங்களும் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டடையில் இருந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்ததோடு, கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, வாழ்க்கையில் மென்மேலும் உயர்ந்து, சமுதாயத்திற்கு மருத்துவ சேவை ஆற்ற வேண்டும் என்றும் மாணவன் கோபிநாத்துக்கு அறிவுரை வழங்கினார்.

தங்களுடைய குடும்பத்தின் ஏழ்மை நிலையை அறிந்து மருத்துவப் படிப்பு படிப்பதற்கு நிதியுதவி வழங்கிய அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான  ஜெயலலிதாவுக்கு  மாணவன் கோபிநாத் மற்றும் அவருடைய தந்தை பாஸ்கரன் ஆகியோர் தங்களது நன்றியினை நெஞ்சம் நெகிழ தெரிவித்துக் கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்