முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முசாபர்நகர் கலவரம்: உ.பி.யில் 6-வது நாளாக பதட்டம்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

லக்னோ, செப். 13 - உத்தரபிரதேச மாநிலம முசாபர் நகர் கலவர பதட்டம் அம்மாநிலத்தில் 6 வது நாளாக நீடிக்கிறது. 

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கலால் என்ற ஊரில் ஒரு பெண்ணை வாலிபர் ஒருவர் கேலி செய்ததை தொடர்ந்து இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு கொலைகள் செய்ததால் கலவரம் வெடித்தது. துரதிஷ்டவசமாக அது மத கலவரமாக உருவெடுத்து முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பரவி விட்டது. 

இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் தாக்குதல் நடத்தியதால் உள்ளூர் போலீசாரால் கலவரத்தை தடுக்க முடியவில்லை. இதை தொடர்ந்து உத்தர பிரதேசத்துக்கு சுமார் 8 ஆயிரம் ராணுவ வீரர்கள் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். என்றாலும் கலவரத்தை ஒடுக்க முடியவில்லை. நேற்றும் 6 வது நாளாக கலவரம் நீடித்தது. நேற்றிரவு 4 பேர் கொல்லப்பட்டதால் உத்தர பிரதேச கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 

கலவர பதட்டம் காரணமாக ஏராளமான கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 40 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. எனவே சாவு எண்ணிக்கை உயரும் என்று கருதப்படுகிறது. கலவரம் மற்ற மாவட்டங்களுக்கு பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மிகவும் பதட்டமான பகுதிகளில் செய்தித்தாள்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. கலவர பீதி நீடிப்பதால் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்தின் 90 சதவீத பகுதிகளில் நேற்று 6 வது நாளாக ஊரடங்கு நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை ஒடுக்க உள்ளூர் போலீசார் வீடு, வீடாக சோதனை நடத்தி ஆயுதங்களை கைப்பற்றி வருகின்றனர். திரித்தால்  என்ற பகுதியில் நடந்த திடீர் சோதனையில் ஏராளமான துப்பாக்கிகள் சிக்கின. என்றாலும் சில கிராமங்களில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடக்கிறது. தினமும் நிறைய பேர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்