முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கபடி: இந்தியா 4-வது முறையாக சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

லூதியானா, டிச. 16 - உலகக் கோப்பை கபடி போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய ஆடவர் அணி வெற்றி பெற்று 4_வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

பரபரப்பான இந்த இறுதிச் சுற்றில் இந்திய அணி வீரர்கள் ஆவேசமாக ஆடி பாக். அணியை தோற்கடித்து பட்டம் வென்றனர். 

4_வது உலகக் கோப்பை கபடி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக வெகு விமர்சையாக நடந்தது. 

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நியூசிலாந்து. இலங்கை, நேபாளம், உட்பட பல நாடுகள் பங்கேற்றன. 

இந்த 4_வது உலக கோப்பை கபடி போட்டி பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு நகர்களில் நடந்தது. இதனை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு களித்தனர். 

முன்னதாக நடைபெற்ற அரை இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் கூடுதல் புள்ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. 

இதன் இறுதிச் சுற்றுப் போட்டி நேற்று முன் தினம் லூதியானா நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. 

லூதியானா நகரில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியைக் காண ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். இந்திய அணி புள்ளிகள் பெற்ற போது அவர்கள் ஆரவாரம் செய்தும், கரகோசம் செய்தும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். 

இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா 23_ 21 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2 புள்ளிகளே வித்தியாசம் இருந்தது. 

முதல் பாதி ஆட்டத்தில் வெற்றி பெறும் நோக்கத்தில் இரு அணி வீரர்களும் கடுமையாக மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் பெற்றன. 

முதல் பாதியில் இழுபறி நிலை நீடித்ததால் 2_வது பாதி துவங்கியதும் இந்திய வீரர்கள் ஆக்ரோசத்துடன் ஆடினார்கள். இதனால் புள்ளிகளைக் குவித்து முன்னேறினார்கள். 

பாகிஸ்தான் வீரர்களும் விடாமல் போராடினார்கள். இருந்த போதிலும் இந்தியா முன்னிலையை தக்கவைத்தது. இறுதியில் 48 _ 39 என்ற புள்ளி கணக்கில் வென்று மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ந்து 4_வது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. 

இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ. 2 கோடி பரிசு கிடைத்தது. 

இந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் போராடி தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணிக்கு ரூ. 1 கோடி பரிசு அளிக்கப்பட்டது. 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மகளிர் பிரிவிலும் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய மகளிரணி 3_வது முறையாக சாம்பியன் ஆனது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்