முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு காய்ச்சலை விரட்ட சித்த மருத்துவமே சிறந்தது

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2016      மருத்துவ பூமி
Image Unavailable

நமது சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொண்டால், எந்தவித நோய் தாக்குதல்களில் இருந்தும் தப்பிக்கலாம். நமது சுற்றுபுறங்களில், கொசு உற்பத்தி ஆகாமல் சுத்தமாக வைக்க வேண்டும். டெங்கு ஜூரம், கொசு கடிப்பதால் ஏற்படும் வைரஸ் பாதிப்பால் பரவும் காய்ச்சல் ஆகும். இந்த காய்ச்சல் ஏடிஎஸ். (aides mosquito) என்னும் நோய் பரப்பும் கொசு கடிப்பதால் ஏற்படுகிறது. இரவில் கடிக்கும் கொசுவால் டெங்கு காய்ச்சல் வருவது இல்லை. டெங்கு பரப்பும் கொசுக்கள் தேங்கி கிடக்கும் சுத்தமான தண்ணீர், ஏர் கூலர்,  பூ ஜாடி ஆகியவற்றிலும், தேங்காய் சிரட்டை, டயர் ஆகியவற்றில் தேங்கியிருக்கும் தண்ணீரிலும் உற்பத்தியாகிறது.
டெங்கு காய்ச்சல் 5 நாட்களுக்கு இருக்கும். மூக்கு ஒழுகுதல்,லேசான இருமல், தொண்டை அடைத்துக்கொள்ளுதல்,  போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த காய்ச்சலின் போது சிறுவர்களுக்கு மேலும் சில அறிகுறிகள் காணப்படும். இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நாளில் அதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.

தலைவலி கடுமையாக இருக்கும். தசைகளிலும் மூட்டுகளிலும் கடுமையான வலி காணப்படும். காய்ச்சல் வந்த சில நாட்களில் குழந்தைகளுக்கு சொறி, சிரங்கு ஏற்படலாம். பசி எடுக்காது. குமட்டும். வாந்தி வரும். உடலில் உள்ள பல நிண நீர் சுரப்பிகளும் பெரிதாகி விடும். ஒரு வாரம் காய்ச்சல் இருக்கும். மறைவது போல மீண்டும் வரும். காய்ச்சலின் போதும் அது சரியான போதும் உடலில் பலவீனம் ஏற்படும். சில குழந்தைகளுக்கு ரத்தக்கசிவு ஏற்படலாம். இதனை கவனிக்காமல் விட்டால் ஆபத்தாகி விடும். இந்த காய்ச்சலுக்கு ஆன்ட்டிபயாடிக் மருந்து பயனளிக்காது. ஆஸ்பிரின் மாத்திரை ரத்தக்கசிவை அதிகரிக்கும். எனவே அந்த மாத்திரையை தரக்கூடாது. குழந்தைகளுக்க ஓய்வுதான் தேவை.

வலியை குறைக்கவும் காய்ச்சலை குறைப்பதற்கும் வென்னீரில் நனைத்த துணியால் ஒத்தி எடுக்கவும். ஆனால், ஹெமரேஜிக் காய்ச்சல் என்ற நிலையை டெங்கு காய்ச்சலில் ஏற்பட்டால், உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இந்த நிலையில், ரத்தக்கசிவு தெரியும். ஈரல் பெருத்து விடும். ரத்தத்தில் உள்ள தட்டடையணுக்கள் அளவு மிகவும் குறைந்து விடும்.
வீட்டில் பயன்படுத்தாத கூலர்களின் ஈரத்தை நன்கு காய வைக்க வேண்டும். பூ தொட்டி தண்ணீரை அடிக்கடி மாற்ற வேண்டும். தண்ணீரை தேக்கி வைக்கும் தொட்டி கிணறு ஆகியவற்றை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். தண்ணீரை அதிக பாத்திரங்களில் பல நாட்கள் பிடித்து வைக்கக்கூடாது.

முதல் நிலையில் (காய்ச்சல் வந்த 3 நாட்களில்) தொண்டையில் புண், மலச்சிக்கல், அதிக காய்ச்சல், தாகம், பலவீனம், வயிற்று பகுதி இளகிய நிலை ஆகிய அறிகுறிகள் காணப்படும். இந்த நிலையில் காய்ச்சலை எளிதில் குணமாக்கலாம்.  2-வது நிலையில், காய்ச்சல் வந்த 7 நாட்களில் கடுமையான முதுகு வலி, உடலில் நீர் சத்து குறைந்து காணப்படும். உடல் முழுக்க சிவப்பு நிறத்தில் சொறி போன்று ஏற்படும். உடலில் ரத்தக்கசிவு, மூட்டு வலி, ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தி குறைவு, கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றில் வீக்கம், நுரையீரலில் நீர் தேங்கி வீக்கம் ஏற்படும். இந்த நிலை மோசமானதாக கருதப்பட்டாலும் 90 சதவீதம் நோயாளிகளை குணப்படுத்தலாம்.

3-வது நிலையில், காய்ச்சல் வந்த 7 நாட்களுக்கு பின்னர் கண்விழிகளில் ரத்தக்கசிவு, ஈரலில் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். வாதத்தை வெளியேற்றி பித்தத்தை குறைக்கும் விதமான சிகிச்சை, ரத்தம் சுத்தம் செய்ய கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல் திறனை அதிகரிக்க வேண்டும். மேலும் ரத்தக்கசிவை நிறுத்தி உடலில் தேங்கும் கெட்ட நீரை வெளியேற்ற சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் மற்ற காய்ச்சலை விட  கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் பல வித கஷாயங்களை தர வேண்டும்.

படேலா கடுரோகின்யாதி, மகாராச அனாதி, மன்சிஸ்டாதி, மகாதிகதகம், வாசா குலுத் சியாதி, நிலவேம்பு குடிநீர், பித்த சுரக்குடி நீர் கஷாயங்களை 50 மி.லி. அளவு எடுத்து 500 மி.லி லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 50 மி.லி முதல் 100 மி.லி வரை சுண்ட கொதிக்க வைத்து அதனை காலை, மாலை வெறும் வயிற்றில் பருகி வர வேண்டும். இப்படி செய்தால் 3 முதல் 4 வேளைகளில் நோய் தாக்கம் குறைந்து உணவு உட்கொள்ளும் நிலை ஏற்படும்.

உணவு உட்கொள்ள முடியாதவர்கள் உலர்ந்த திராட்சையை 6 மணி நேரம் ஊற வைத்து வெந்நீர் ஆறிய பின்னர், அதனை அருந்த வேண்டும். பொரியையும் நீரில் ஊற வைத்து உணவாக தரலாம். தும்பை இலை 20 மி.லி எடுத்து  100 மி.லி தண்ணீரில் கலந்து மிதமான சூட்டில் கொதிக்க வைத்து, 6 மணி நேரத்திற்கு ஒரு முறை தர வேண்டும். நில வேம்பு, சுக்கு, மிளகு பாற்படாகம், விலாமிச்சை , சந்தனம், பேய் புடல் கோரைக்கிழங்கு வெட்டி வேர் ஆகியவைகளை தேவையான அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடி கட்டி குடிக்க வேண்டும். மலை வேம்பு இலையை மிக்சியில் அரைத்து துணியில் வடிகட்டி அதிக பட்சம் 10 மி.லி.வரை நாள் ஒன்றுக்கு 4 முறை குடிக்கலாம். இவைகள் மூலம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும். பிற வைரஸ்  காய்ச்சலும் வராது.

பலவீனத்தை போக்க அமுக்கரா சூரணத்தை தேன் அல்லது நெய்யில் கொடுத்து வரலாம். டெங்கு காய்ச்சலை குணப்படுத்த சித்த மருந்துகளே சிறந்தவை. மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக மக்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பப்பாளி இலை ஜூஸ், மலை வேம்பு, நில வேம்புக்கஷாயம் ஆகியவற்றை கொடுப்பதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.நிலவேம்பு  கஷாயம் காய்ச்சலை கட்டுப்படுத்தும். பப்பாளி இலை ஜூஸ் இரத்த தட்டைணுக்களை  பெருக்கச்செய்யும். மலைவேம்பு கஷாயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். தீராத நோய்களை தீர்க்கும் வல்லமை சித்த மருத்துவத்திற்கு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்