முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரிந்து படித்தால் மட்டுமே சாதிக்க முடியும்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2016      மாணவர் பூமி
Image Unavailable

அதிக மார்க் எடுத்தால் மட்டும் பிரதமராகி விட முடியுமா? புரிந்து படித்தால் மட்டுமே சாதிக்க முடியும்

நாளைய உலகம் மாணவர்கள் கையில்தான் உள்ளது. நாளைய தலைவர்கள், எதிர்கால நட்சத்திரங்கள் என்று மாணவர்கள் போற்றப்படுகின்றார்கள்.

நாட்டிற்கும் வீட்டிற்கும் செய்ய வேண்டிய கடமைகள் மாணவர்களுக்கு உள்ளது. மாணவர்களால் எதிர்கால உலகம் வளம் பெற வேண்டும் எனில் இன்றைய மாணவர்கள் சிறந்தவர்களாக உருவாக வேண்டும். இதற்கு நல்ல உடல் நலம், மன நலம், நல்ல சமூக நோக்கு ஆன்மீக பார்வை இவையும் நலமாக இருக்க வேண்டும்.

சிறந்த மாணவர்களுக்கு அடிப்படை நல்ல கல்வி. இன்றைய இந்திய கல்வி முறை உலக மாற்றங்களுக்கு ஏற்ற கல்வி முறையாக இல்லை. நம் கல்வி முறை அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இல்லை. தற்போதைய போட்டி உலகினை எதிர் கொள்ள மாணவர்களின் திறமைகளை வளர்க்க அவர்களிடம் கலந்துரையாடும் சிந்தனையை உருவாக்க வேண்டும். கலந்துரையாடும் தன்மை அவர்களை சிறந்த எதிர்கால தலைவர்களாகவும் தொழில் துறை வல்லுநர்களாகவும் ஆக்க உதவும்.

மாணவர்கள் நல்ல உணவு பழக்கங்களை கைக்கொள்ள வேண்டும். சத்தான இயற்கை உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கம் அவர்களை சிறந்த உடல் நலத்துடன் வாழ உதவும். துரித உணவுகள் உள்ளிட்டவைகள் இளம் வயதிலேயே அதிக எடை ஏற்பட்டு விளையாட்டு போன்றவற்றில் சாதிக்க தடையாக இருக்கும்.

வன்முறை கலாச்சாரங்கள் தற்போது தலைதூக்கி வரும் இந்த நிலையில் மாணவர்கள் இளம் பருவத்திலேயே நல்ல சகிப்புத்தன்மை, பொறுமையை கற்றுக் கொள்ள வேண்டும். என் சமூகம் என் நாடு என்று பற்றுடன் இருந்தால் வன்முறை கலாச்சார சிந்தனை தடுக்கப்படும். பாலியல் வன்முறைகளை தடுக்க பாலியல் பற்றிய முறையான அறிவு மாணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தேசிய மாணவர் படை, என்.எஸ்.எஸ் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் தற்போதைய போட்டி உலகினை வெல்ல கணிணி கல்வியும் கற்க வேண்டும். மாணவர்கள் விளையாட்டு, கல்வி, சமூக அக்கரை உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி முறையான பயிற்சிகள் செய்து வந்தால் எதிர்கால உலகை சிறப்பாக ஆள்வது திண்ணம். எப்போதும், செல்போன்களை கையில் வைத்துக் கொண்டு, அதிலேயே கவனம் செலுத்தக் கூடாது. "பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று சொல்லிவிட்டு சென்றார்கள் நமது முன்னோர்கள். எனவே, மாணவர்களின் சிந்தனை எல்லாம் இளம் பருவத்தில் படிப்பிலேயே இருக்க வேண்டுமே தவிர, செல்போன் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கூடாது. மேலும், காதல் கத்திரிக்காய் போன்றவற்றில் மனதை அலைபாய விடக்கூடாது. படிக்கும் காலத்தில் படிப்புதான் முக்கியமே தவிர, காதல் போன்ற தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்துவது வாழ்க்கை பாதையையே மாற்றிவிடும்.

ராம்குமாரின் விவகாரமே அதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு. வலுவான பொருளாதாரம் இல்லாத வெட்டிதனமான காதல் எதுவும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. எனவே, மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டும். அதையும் மார்பில் குத்தி குத்தி மனப்பாடம் செய்தல் கூடாது. ஆசிரியர் கற்றுதரும் பாடங்களை நன்கு உள்வாங்கி அவற்றை புரிந்து படித்தலே நலம் பயக்கும். மனப்பாடம் செய்து வெற்றி பெரும் மாணவர்கள் வேலைக்கான நேர்காணலுக்கு செல்லும் போது, வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. நன்கு புரிந்து படிக்கும் மாணவர்களே வேலைக்கான நேர்காணலில் வெற்றி பெறுகிறார்கள். புரிந்து படிக்காத மாணவர்கள் நேர்முக தேர்வில் வெற்றி பெறுவதில்லை. இன்றைய நமது கல்விமுறை பல மாணவர்களுக்கு உருப்படியான தமிழையும் கற்றுதருவதில்லை. உருப்படியான ஆங்கிலத்தையும் கற்றுத்தருவதில்லை. அதனால்தான் அவர்கள் சில சமயங்களில் தோல்வியை தழுவ நேரிடுகிறது.

பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளில் சாதனை படைக்கும் மாணவிகள் பேட்டி கொடுக்கும்போது, நான் பிரதமர் ஆவேன். நான் ஜனாதிபதி ஆவேன். என்று சொல்கிறார்கள். அதை படிக்கும் போது நமக்கு சிரிப்புதான் வருகிறது. மனப்பாடம் செய்து மார்க் எடுத்துவிட்டால் எல்லோரும் மோடி ஆகிவிடமுடியாது. எல்லோரும் அப்துல் கலாம் ஆகிவிடமுடியாது. எனவே, நமது மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்னதை போல, மாணவ - மாணவிகள் கனவுகாண வேண்டும். அதோடு நிறுத்திக்கொள்ள கூடாது. நன்கு புரிந்து படித்து அந்த கனவை நனவாக்க வேண்டும். விளையாட்டு, விண்வெளி ஆராய்ச்சி போன்று துறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் ஒரு சிந்துவை போல் வெள்ளி பதக்கத்தை பெறமுடியும். சாக்சிமாலிக்கை போல வெங்கல பதக்கம் பெற முடியும். மாற்றுத்திறனாளியாக இருந்த போதிலும், தன்னம்பிக்கையோடு விளையாடியதால்தான் தமிழக வீரர் மாரியப்பனால் தங்க பதக்கத்தை வெல்ல முடிந்தது. ஆக சாதிப்பதற்கு ஊனம் அவருக்கு தடையாக இருக்கவில்லை. அவரது நம்பிக்கை அவருக்கு கைகொடுத்திருக்கிறது. ஆகவே, மாணவ - மாணவிகள் குருட்டு மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்து வெற்றி பெற வேண்டும். பல்வேறு துறைகளிலும் மேற்கண்ட சாதனையாளர்களை பார்த்து வெற்றி பெற சபதம் எடுக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் நமது முன்னாள் மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்னதை போல, கனவு கண்டு அவற்றை நனவாக்க கடின முயற்சி எடுக்க வேண்டும். என்பதே நமது எதிர்பார்ப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்