முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வறட்சியிலும் எழுச்சிபெற்ற பேரீச்சை உற்பத்தியில் விவசாயி சாதனை

புதன்கிழமை, 5 ஜூலை 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

தமிழகத்தில் பருவமழை பொய்த்து கடுமையான வறட்சி ஏற்பட்ட நிலையிலும், தென் இந்தியாவிலேயே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பேரீச்சை பழம் உற்பத்தியில் தனி முத்திரை பதித்து சாதனை படைத்து வருகிறார்.

உலக அளவில் இங்கிலாந்து, கலிபோர்னியா, இஸ்ரோல், அபுதாபி ஆகிய நாடுகளில் மட்டுமே அதிகளவு பர்ரி பேரீச்சை உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தாவரவியல் ஆய்வுக்கூடங்களில் திசுமூலமாக உற்பத்தி செய்து, பல்வேறு நிலைகளில் சுமார், 3 ஆண்டுகள் வரை ஆய்வகத்தில் வளர்க்கப்படுகிறது. பின்னர், சீதோஷ்ன இயற்கைக்கு ஏற்ப பக்குவப்படுத்தி ஓராண்டு வரை பசுமை குடிலில் வளர்க்கப்பட்டு, நன்கு திரட்சியான பிறகே செடிகள் விற்பனைக்கு வருகிறது. அதை வாங்கி நடவு செய்த இரண்டு ஆண்டுகளில் காய்க்க தொடங்கி விடும். தொடங்கி முதல் வருடத்திலேயே ஒவ்வொரு செடியிலும் முதல், 50 கிலோ வரை காய்க்கும். மூன்றாண்டு பருவத்தில், 100 கிலோ வரையும், ஐந்தாண்டு பருவத்தில், 100 கிலோ முதல், 300 கிலோ வரை காய்க்கும் தன்மை கொண்டது.

மேலும், பேரீச்சை பழங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், அஜ்வால், பர்ரி பேரீச்சை அதிக சதைப்பற்றும், ருசித்தன்மையும் உள்ள முக்கிய ரகங்களாக உள்ளன. இதுபோன்ற பேரீச்சை ரகங்கள் வெளிநாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த, 23 ஆண்டுகளாக தமிழகத்தில், தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்து அரியகுளத்தை சேர்ந்த நிஜாமுதின் விவசாயி ஒருவர் பேரீச்சை பழம் உற்பத்தியில் ஈடுபட்டு தனிமுத்திரை பதித்துள்ளார்.

இது குறித்து விவசாயி நிஜாமுதின் கூறியதாவது: தென் இந்தியாவிலேயே முதன்முதலில், தருமபுரி மாவட்டம், அரியகுளம் பகுதியில் தான் பேரீச்சை உற்பத்தி துவங்கப்பட்டது. கடந்த, 1982 முதல், 1990 வரை சவுதிஅரேபியாவில், வேளாண் பயிற்சிகூடத்தில் பணியாற்றி வந்தேன். பின்னர், இடையில் அரியகுளம் பகுதியிலுள்ள என்னுடைய சொந்த நிலத்தில் பர்ரி பேரீச்சை செடி நாற்றுவிடப்பட்டு மீண்டும், சவுது அரேபியாவிற்கு சென்றேன். அதைதொடர்ந்து, இங்கு 1991ல் பேரீச்சை செடி நடவு செய்யும் பணியை துவங்கினேன். தற்போது, ஒரு ஏக்கருக்கு, 76 செடிகள் நடப்பட்டு, 13 ஏக்கரில், 630 பேரீச்சை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்கான உற்பத்தி செலவும் குறைவு தான். சென்றாண்டு மட்டும், 15 டன் பேரீச்சை உற்பத்தி செய்யப்பட்டது. இது ஒவ்வொறு ஆண்டும் உற்பத்திறன் பெருகிகொண்டே இருக்கும்.

இங்கு, பர்ரி, கண்ணிந்தி, அஜ்வால், ரூஸ், மிஜ்னாஸ், கத்தாவி, கலாஸ், அலுவி, ஜகிதி, சிலி உள்ளிட்ட, 32 ரக பேரீச்சை சாகுபடி செய்கிறேன். பெரும்பாலும், ஜனவரி- பிப்ரவரி மாதங்களில் மரங்களில் பூ பூக்கும். ஜூன்- ஜூலை மாதம் நல்ல தரமான பேரீச்சை பழங்கள் அறுவடை செய்யப்படுகிறது. பேரீச்சை குறைந்தபட்சம், 100 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரையும், செடி ஒன்று, 3,576 ரூபாய்க்கு வற்க்கப்படுகிறது. இதற்கான சாகுபடி காலம், ஆறு மாதம் மட்டுமே. மீதமுள்ள ஆறு மாதங்கள் மரங்கள் பராமரிக்கப்படும். நிலத்தில், குறைந்த ஈரப்பதம் இருந்தாலே உற்பத்திக்கு போதுமானது. தவிர, ஆட்கள் கூலி, பராமரிப்பு செலவு எதுவும் கிடையாது. விவசாயிகள் இந்த செடிகள் வளர்ப்பது குறித்து நன்கு தெரிந்து கொண்டு கையாண்டால், குறைந்த செலவில் அதிக வருவாய் பெறலாம். அதேபோல், வறட்சியிலும், நன்கு வளரக்கூடிய தன்மையும் கொண்டது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பருவமழை பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்ட நிலையில், தென்னை, மா, வாழை காய்ந்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பேரீச்சை உற்பத்தி இதற்கு மாற்றாக செழிப்படைந்துள்ளது. மேலும், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பேரீச்சை வளர்ப்பில் அரசு மானியம் அளிக்கிறது. குஜராத்தில், 35 சதவீதமும், ராஜஸ்தானில், 90 சதவீதம் அந்த அரசு மானியம் வழங்கின்றன. அதேபோல், தமிழக அரசும், பேரீச்சை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து