முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பையில் முதலாவது அரையிறுதி: இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

திங்கட்கிழமை, 8 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

மான்செஸ்டர் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 11-ம் தேதி நடைபெறும் 2-வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் சந்திக்கின்றன.

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. வருகிற 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. லீக் ஆட்டம் முடிவில் இந்தியா (15 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (14 புள்ளிகள்), இங்கிலாந்து (12 புள்ளிகள்), நியூசிலாந்து (11 புள்ளிகள்) ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

பாகிஸ்தான் அணி (11 புள்ளிகள்) 5-வது இடமும், இலங்கை அணி (8 புள்ளிகள்) 6-வது இடமும், தென்ஆப்பிரிக்க அணி (7 புள்ளிகள்) 7-வது இடமும், வங்காளதேச அணி (7 புள்ளிகள்) 8-வது இடமும், வெஸ்ட்இண்டீஸ் அணி (5 புள்ளிகள்) 9-வது இடமும், ஆப்கானிஸ்தான் அணி (0) கடைசி இடமும் பெற்று அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறின.

லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, 4-வது இடம் பெற்ற கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. மான்செஸ்டரில் நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

பர்மிங்காமில் 11-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 2-வது இடம் பிடித்த ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 3-வது இடம் பெற்ற இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியை சந்திக்கிறது. இறுதிப்போட்டி லண்டனில் வருகிற 14-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து