முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை கால்பந்து: தகுதி சுற்றில் கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பியது இந்தியா

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துஷான்பே : உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூர் - வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் மொத்தம் 12 அணிகள் 3-வது சுற்றுக்கு முன்னேறும். இதில் ‘இ’ பிரிவில் இந்திய அணியோடு, ஓமன், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன.

உலக தரவரிசையில் 106-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 149-ம் நிலை அணியான ஆப்கானிஸ்தானுடன் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நேற்று முன்தினம் மோதியது. குளிர்ச்சியான சீதோஷ்ண நிலைக்கு மத்தியில் இரு அணி வீரர்களும் துடிப்புடன் ஆடினர். 45-வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ஜெல்பஹார் நஜாரி கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார். பதில் கோல் திருப்ப போராடிய இந்தியாவுக்கு பல வாய்ப்புகள் நழுவிப் போயின.

67-வது நிமிடத்தில் இந்திய நட்சத்திர வீரர் சுனில்சேத்ரி கோல் நோக்கி தலையால் முட்டிய பந்தை எதிரணி கோல் கீப்பர் ஒவைஸ் அஜிஜி தடுத்து வெளியே தள்ளினார். வழக்கமான 90 நிமிடங்களுக்கு பிறகு காயம் உள்ளிட்ட விரயத்திற்காக 6 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதன் 3-வது நிமிடத்தில் கார்னர் பகுதியில் இருந்து வந்த பந்தை இந்திய மாற்று ஆட்டக்காரர் செய்மின்லென் டோங்கெல் தலையால் முட்டி கோலாக்கி அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத இந்திய அணி (3 டிரா, ஒரு தோல்வி) அடுத்து ஓமன் அணியை வரும் 19-ம் தேதி மஸ்கட்டில் சந்திக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து