இன்று கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்

நெல்லை : இன்று கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி சபரிமலை செல்லக்கூடிய ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்குகிறார்கள்.
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலை செல்வார்கள். கார்த்திகை முதல் தை வரை சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறும். நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்கள். கார்த்திகை மாதம் இன்று (17-ம் தேதி) பிறக்கிறது. இதையொட்டி மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் நேற்று நடை திறக்கப்பட்டு புதிய மேல் சாந்திகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி இன்று முதல் சபரிமலை செல்லக்கூடிய ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்குகிறார்கள்.
துளசி மணி மாலை மற்றும் காவி வேஷ்டி அணிந்து தினமும் காலை மற்றும் மாலையில் நீராடி, ஐயப்பனை வணங்கி பூஜைகள் செய்வார்கள். இனி வீதிகளில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சரண கோஷ முழக்கங்களை காண முடியும். சபரிமலை சீசன் தொடங்குவதையொட்டி கடைகளில் துளசி மணி மாலை மற்றும் காவி வேஷ்டிகளின் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது. இன்று கார்த்திகை பிறப்பையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடக்கின்றன. கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி இனி வரும் நாட்களில் காய்கறிகள் மற்றும் பூக்களின் விலைகளும் கடுமையாக உயரும் நிலையும் ஏற்படும்.