முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோவில் யானையை தாக்கிய பாகன்கள் சிறையில் அடைப்பு

திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மேட்டுப்பாளையம் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை தாக்கிய பாகன்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அந்த யானையை கவனிக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கடந்த 8-ம் தேதி முதல் கோவில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 26 யானைகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூர்ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை (18), அதன் பாகன் வினில்குமார் (46) மற்றும் உதவியாளர் சிவபிரசாத் (32) ஆகியோர் குச்சியால் தாக்கும்போது, வலியால் யானை கதறுவதுபோன்ற வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து பாகன் வினில்குமாரை சஸ்பெண்ட் செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாகன், உதவியாளர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், தமிழ்நாடு வளர்ப்பு யானை (மேலாண்மை, பராமரிப்பு) விதிகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர், இருவரையும் கைது செய்தனர். பின்னர், நீதிபதி முன் ஆஜர்படுத்தி அவிநாசி கிளைச்சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது யானையை நிர்வகிப்பதற்கான பொருத்தமான வழிமுறைகள் அறநிலையத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் யானையுடன் வந்த உதவியாளர் சுப்பிரமணியம் தற்போது யானையை கண்காணித்து வருகிறார். இவர் ஏற்கெனவே கடந்த மூன்று ஆண்டுகளாக தேக்கம்பட்டி முகாமில் இந்த யானையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். யானைக்கு மாற்றுப்பாகனை நியமிக்க அறநிலையத்துறையினர் பரிசீலித்து வருகின்றனர். ஜெயமால்யதா யானையை முழுமையாக பரிசோதித்த கோவை வன கால்நடை அலுவலர், யானைக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து