முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்டோபர் 6, 9 தேதிகளில் 2 கட்டங்களாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு

திங்கட்கிழமை, 13 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, வாக்குப்பதிவு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும். இம்மாவட்டங்களுக்கு செப்.15-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வந்தது. இதனிடையே, இந்த 9 மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த 31-ம் தேதி வெளியிட்டது. மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியதாவது:

வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.

வேட்புமனுத் தாக்கல் நாளை (செப்.15) தொடங்கி செப்.22-ம் தேதி வரை நடைபெறும். 23-ம் தேதியன்று வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும். 25-ம் தேதி அன்று வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம். வேட்பு மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பெறப்படும்.

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கரோனா அறிகுறி உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கடைசி 1 மணி நேரம் வாக்களிக்கலாம். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றியே தேர்தல் நடைபெறும்.

தேர்தல் நடைபெற உள்ள ஏனைய 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத 789 இடங்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும். அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

உடனடியாக அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அக்.16-ம் தேதி வரை அமலில் இருக்கும். 9 மாவட்டங்களுக்கும் தனித்தனி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

 

இவ்வாறு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து