முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உருமாறிய கொரோனா வைரசை கண்டறிய சென்னையில் மரபணு பகுப்பாய்வு கூடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 14 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை  : பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை ஆய்வகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து 91 பேருக்கு  பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை ஆய்வகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்தைத் திறந்து வைத்தார்.  மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாகத் திறன்மிகு உதவியாளர் நிலை-II (Skilled Assistant Grade-II) பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 9 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு 82 வாரிசுதாரர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

சட்டமன்றப் பேரவையில் 2.8.2021 அன்று நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது  மரபணு பகுப்பாய்வு கூடம் (Whole Genome Sequencing) ரூபாய் 4 கோடி செலவில் சென்னை, டி.எம்.எஸ். வளாகப் பொது சுகாதார ஆய்வகத்தில் நிறுவப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதார ஆய்வகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.  

கொரோனா நோய்த் தொற்றினை உருவாக்கும் வைரஸ், அதன் மரபணுவில் உண்டாகும் தொடர் மாற்றங்களினால் புதுவகையாக உருமாறி, நோய்த் தொற்றின் தாக்கத்தினைத் தீவிரப்படுத்துகிறது.  உருமாறிய கொரோனா வைரஸ்களைக் கண்டறிய மரபணு பகுப்பாய்வகம் அவசியமாகும்.  இத்தகைய மரபணு பகுப்பாய்வகம், எந்த ஒரு மாநில அரசாலும் இதுவரை அமைக்கப்படவில்லை.  

தமிழகத்தில் பரவும் கொரோனா வைரஸ்களின் உருமாற்றத்தினைக் கண்டறிய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இயங்கும் மரபணு பகுப்பாய்வகங்களில் கொரோனா மாதிரிகள் அனுப்பப்பட்டு, பகுப்பாய்வு முடிவுகள் தாமதமாகப் பெறப்பட்டு வந்தது.  தற்போது, இக்குறைகளைப் போக்கும் வகையில், பொது சுகாதாரத் துறையின்கீழ் இயங்கும் மாநிலப் பொது சுகாதார ஆய்வகத்தில் மரபணு பகுப்பாய்வுக்கூடம் நிறுவப்பட்டுள்ளது.  இவ்வாய்வகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ்களை ஆரம்ப நிலையிலேயே விரைவாகக் கண்டறிந்து, அதனடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனா நோயின் தாக்கத்தினைப் பெருமளவு தடுத்திட இயலும்.

மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தமிழ்நாடு மாநில சுகாதாரப் போக்குவரத்துத் துறைக்குத் திறன்மிகு நிலை-II  பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 9 நபர்களுக்கும்,  கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு மருத்துவக் கல்வித் துறையில் 51 வாரிசுதாரர்களுக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையில் 15 வாரிசுதாரர்களுக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையில் 15 வாரிசுதாரர்களுக்கும், டாம்ப்கால் நிறுவனத்தில் ஒரு வாரிசுதாரருக்கும் என 82 வாரிசுதாரர்களுக்கும், பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழக முதல்வர்   10 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர் முனைவர் பி. செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழுமத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ். கணேசன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் எஸ். குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர். நாராயணபாபு, தமிழ்நாடு மாநிலச் சுகாதாரப் போக்குவரத்துத் துறை இயக்குநர் எஸ். நடராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து