முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.83.55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை திறந்து வைத்தார் முதல்வர்

திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

கொளத்தூர் : கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.83.55 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற நலத்திட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பயனாளிகளுக்கு... 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 83 லட்சத்து 55 ரூபாய் மதிப்பீட்டிலான ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், நியாயவிலைக் கடை, விளையாட்டு திடல் மற்றும் பூங்கா ஆகியவற்றை திறந்து வைத்து, 167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 157 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். 

வளர்ச்சி மையம்...

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலை, செயின்ட் மேரிஸ் பள்ளிக்கு அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். 

விளையாட்டு திடல்...

பல்லவன் சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 24 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையை தமிழக முதல்வர் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, அவ்வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். சீனிவாசா நகர் 3-வது குறுக்குத் தெருவில் 28 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சிறுவர் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்காவை தமிழக முதல்வர் திறந்து வைத்து, சிறுவர், சிறுமியர்களுடன் உரையாடினார். 

சான்றிதழ்கள்...

மேலும், பெரியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 157 மாணவ, மாணவியருக்கு தமிழக முதல்வர் மடிக்கணினிகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை, தொகுதி மக்களுக்கு மருத்துவ உதவித் தொகை, திருமண உதவித்தொகை, மாவு அரவை இயந்திரங்கள், இஸ்திரி பெட்டிகள், தள்ளுவண்டிகள், மீன்பாடி வண்டிகள், என மொத்தம் 167 பயனாளிகளுக்கு தமிழக முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  

இந்த நிகழ்ச்சியில்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து