முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் உள்ளதை போன்று தமிழகத்திலும் மாடர்ன் பள்ளிகள் விரைவில் துவக்கம்: ஸ்டாலின் உறுதி : மொஹலா கிளினிக் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2022      இந்தியா
CM-2 2022 04 01

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்திலும் இது போன்ற பள்ளிகள் விரைவில் துவக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அங்குள்ள மொஹலா கிளினிக்கை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். 

டெல்லியில் மேற்கு வினோத் நகரில் உள்ள டெல்லி அரசு மாதிரி பள்ளியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.  அப்போது, டெல்லி அரசு கல்வித் துறை இயக்குநர் ஹிமான்சூ குப்தா, டெல்லி கல்விமுறை பற்றிய முக்கிய கூறுகள் குறித்து எடுத்துரைத்தார். 

டெல்லி அரசுப் பள்ளிகளில் தொழிற்முனைவோர் மற்றும் வணிகம் குறித்த பாடத்திட்டமான பிசினஸ் பிளாஸ்டர்ஸ் படிப்பில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை 13 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இதற்காக 2021-22ஆம் ஆண்டில் டெல்லி அரசால் 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதாகும்.  

மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின், டெல்லி மாதிரி பள்ளியின் வளர்ச்சி குறித்த குறும்படத்தையும் பார்வையிட்டதோடு, அப்பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர், அப்பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டு, பாராட்டினார். மேலும், அப்பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தை பார்வையிட்டு, அங்கிருந்த மாணவர்கள் மற்றும் நீச்சல் பயிற்சியாளர்களுடன் உரையாடினார். 

டெல்லி அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்ட பின்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மாடர்ன் பள்ளியை உருவாக்கி, அது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியை நான் கேள்விப்பட்டேன். அதனால், டெல்லிக்கு வந்த நான் அந்தப் பள்ளியை பார்வையிடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்ட போது, நிச்சயமாக நீங்கள் வருகிற போது நானே வரவேற்று அதை அழைத்துச் சென்று காண்பிக்கிறேன் என்று டெல்லி முதல்வர் சொல்லி, என்னை இங்கு அவரே அழைத்து வந்திருக்கிறார்.  அதற்காக முதலில் அவருக்கு நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி  பொறுப்பேற்றிருக்கக்கூடிய எங்களுடைய அரசு,  எல்லாத் துறைகளுக்கும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறதோ, அதைவிட அதிகமான அளவிற்கு கல்விக்கும், மருத்துவத்திற்கும் முக்கியத்துவத்தை நாங்கள் தந்து கொண்டிருக்கிறோம். தற்போது இந்த மாடர்ன் பள்ளி எப்படி நடந்து கொண்டிருக்கிறதோ, அதே போன்ற பள்ளிகளை தமிழ்நாட்டில் விரைவில் நாங்கள் உருவாக்கப் போகிறோம். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் பணிகள் முடிவுற்று அந்தப் பள்ளியை நாங்கள் திறக்கிற நேரத்தில், நிச்சயமாக உங்களுடைய முதல்வர் கெஜ்ரிவாலை நாங்கள் அழைக்க இருக்கிறோம். அவரும் வருவார். வரவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பில் உங்கள் மூலமாக நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.   

அதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின்,  அரசு மொஹலா கிளினிக்கை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, 500 மொஹலா கிளினிக்குகள் உள்ளதாகவும், அதனை 1000-ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், இக்கிளினிக்குகளை  டெல்லி மெட்ரோ ரயில் நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் தொடங்க உள்ளதாகவும், மகளிருக்கான தனி மொஹலா கிளினிக்குகளை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.      

இந்த நிகழ்வுகளின் போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை  முதல்வர் மனிஷ் சிசோடியா, தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ.ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, டெல்லி அரசு பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் ராஜேஷ் பிரசாத், பள்ளிக் கல்வித் துறை ஆணையர் கே.நந்தகுமார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் இரா.சுதன், இல்லம் தேடிக் கல்வி சிறப்புப் பணி அலுவலர் இளம்பகவத், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) சினேகா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து