முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி நட்சத்திரம் தொடங்கியது - அனல் தாக்கம் மேலும் அதிகரிக்கும் : தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

புதன்கிழமை, 4 மே 2022      தமிழகம்
Sun 19-04-2022

Source: provided

சென்னை : கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. இதனால் அனல் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும். இந்த அக்னி நட்சத்திர காலத்தில் தேவையின்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், குளிர்பானங்களை அருந்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே பல்வேறு நகரங்களில் வெயில் அதிகரித்து வருகிறது. வேலூரில் படிப்படியாக அதிகரித்து அதிகபட்சமாக 108.1 டிகிரி வரை கொளுத்தியது.  தொடர்ந்து நேற்று முன்தினம் 105.4 டிகிரி வெயில் சுட்டெரித்தது. திருவண்ணாமலையில் 105.2 டிகிரி வாட்டியது.   இதே போல் கரூர், பரமத்தி, மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திருத்தணி, நாமக்கல், தஞ்சை ஆகிய நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. சென்னை மீனம்பாக்கத்தில் 99 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 96 டிகிரியும் வெயில் பதிவானது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. 

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. 28-ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. இந்த காலத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.   அதற்கு முன்னோட்டமாக நேற்று காலையிலேயே வெயில் வாட்ட தொடங்கியது.  காலை 9 மணியளவிலேயே மதியம் போல் வெயில் சுட்டெரித்தது.  கத்திரி கதகதப்பு தொடங்கியுள்ளதால் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை குழந்தைகள் முதியவர்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பகல் நேரங்களில் பருத்தி ஆடைகளை உடுத்துவது நல்லது. நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும். 25 நாட்கள் தொடரும் வெயிலில் முடிந்த வரை வெளியில் செல்வதைத் தவிர்த்தால் உடலில் நீர் வற்றிப் போகும் அபாயத்தை தவிர்க்கலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தை குறைக்க சிவன் கோவில்களில் தாராபிஷேகம் நடைபெறும். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று தராபிஷேகம் தொடங்கியது. வழிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  மேலும் தெற்கு அந்தமான் அருகே நாளை 6-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் தென் கிழக்கு வங்க கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.  அக்னி நட்சத்திர காலகட்டத்தில் பரவலாக மழை பெய்தால் ஓரளவு வெப்பம் தணியும் என்று எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து