முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சலில் 8 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா

ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2022      இந்தியா
JP-Natta 2022-11-06

Source: provided

சிம்லா : இமாச்சல் பிரதேச தேர்தலில் பா.ஜ.க. வென்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும், 8 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். 

இமாச்சல  பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 413 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தோ்தல் முடிவுகள் டிசம்பர் மாதம் 8-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்தத் தோ்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் பிரதான போட்டியாளா்களாக உள்ள நிலையில், ஆம் ஆத்மியும் போட்டியிடுகிறது. இந்த நிலையில் இமாச்சலில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா சிம்லாவில் நேற்று  வெளியிட்டார்.

அதில், தேர்தலில் பா.ஜ.க. வென்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். நிபுணர் குழு அமைக்கப்பட்டு அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் பொது சிவில் சட்டம் அமலாகும். மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு பள்ளிகளுக்கு செல்ல மிதிவண்டி வழங்கப்படும். அனைத்து மாவட்டத்திலும் இரண்டு பெண்கள் விடுதிகள் அமைக்கப்படும்.

8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசு ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் உள்ள முரண்பாடுகள் நீக்கப்படும். பணியின் போது உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்படும். அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு. ஆப்பிள் விவசாயிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 12 சதவீதமாக வரையறுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக இமாச்சலில் காங்கிரஸின் வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில் நேற்று பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து