முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி சம்பவம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      தமிழகம்
CM-1 2023 03 23

கிருஷ்ணகிரியில் நடந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று சட்டசபையில் விளக்கம் அளித்தார். 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கவன ஈர்ப்புக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் காவல் நிலைய சரகம், கிட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெகன் (28) என்பவர், மார்ச் 21 அன்று சுமார் 1.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் கே.ஆர்.பி. அணை சாலையில் சென்று கொண்டிருந்த போது, முழுக்கான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சங்கர்(அ.தி.மு.க. பிரமுகர்) உள்ளிட்ட மூவர், ஜெகனை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக, காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்த விசாரணையில், கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவியான சங்கரின் மகள் சரண்யாவை, டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான ஜெகன் காதலித்து, பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி வீட்டைவிட்டு அழைத்துச் சென்று, 26-1-2023 அன்று கோவிலில் வைத்துத் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரமுற்ற சங்கர் உள்ளிட்டோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். சங்கர் காவல் துறையினரால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலையில் சம்பத்தப்பட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர், அவதானப்பட்டி அதிமுக செயலாளர் என்பது காவல் துறையினரால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாதவண்ணம் உரிய நடவடிக்கைகளும், விழிப்புணர்வுப் பணிகளும் காவல் துறை சார்பில் மாவட்ட நிருவாகத்தின் சார்பிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து மனிதநேய அடிப்படையில், சமூக நல்லிணக்கத்தைப் பேணிக் காத்திட வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து