Idhayam Matrimony

2024-25-ம் ஆண்டில் நாட்டிலேயே 9.69 சதவீத வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் புதிய உச்சம் தொட்ட தமிழகம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2025      தமிழகம்
CM 2024-12-03 (2)

Source: provided

சென்னை : 2024-25-ம் ஆண்டில் தமிழ்நாடு 9.69 சதவீத உண்மை வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாடு 9.69 சதவீதம் உண்மை வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இதுவேயாகும்.

நிலையான விலைமதிப்பின்படி (அடிப்படை ஆண்டு: 2011-12), 2023-24ஆம் ஆண்டில் ரூ.15,71,368 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி , 2024-25-ம் ஆண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளதாக ஒன்றியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் 2017-18ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி வீதம் 8.59% பதிவாகியுள்ளது. 2020-21ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் குறைந்தபட்சமாக 0.07% எனப் பதிவாகியது. இக்காலகட்டத்தில் பல மாநிலங்கள் எதிர்மறை வளர்ச்சியினைக் கொண்டிருந்த நிலையில், தமிழ்நாடு குறைந்தபட்சம் நேர்மறை வளர்ச்சியினைக் கொண்டிருந்தது.

உண்மை வளர்ச்சி வீதம் என்றால் என்ன?: பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே உண்மை வளர்ச்சி வீதம் ஆகும். பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே பெயரளவு வளர்ச்சி வீதம் ஆகும். 2024-25 ஆம் ஆண்டு தமிழ்நாடு 14.02 சதவீதம் பெயரளவு வளர்ச்சி வீதத்தினைப் பெற்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் திகழ்கிறது.

மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணையதளத்தில் குஜராத், பிஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 2024-25 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி வீதத் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. தமிழ்நாடு அரசு முதன்முதலாக மார்ச் 2025 இரண்டாம் வாரத்தில் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் முன்கணிப்பு செய்யப்பட்ட வளர்ச்சி வீதத்துடன், ஒன்றிய அமைச்சகம் வெளியிட்ட உண்மை வளர்ச்சி வீதம் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்தப் பொருளாதார ஆய்வு 8% க்கும் மேல் வளர்ச்சி இருக்கும் எனக் கணித்திருந்தது.

சென்னைப் பொருளியியல் நிறுவனத்தின் மூத்த பொருளாதார வல்லுநர்களான முனைவர் சி. ரங்கராஜன் மற்றும் முனைவர் கே.ஆர். சண்முகம் ஆகியோர் ஜூலை 2024ல் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி வீதம் 9.3% ஆக இருக்கும் எனக் கணித்திருந்தனர். இறுதியில், மேற்குறிப்பிட்ட இரண்டு மதிப்பீடுகளையும் தாண்டி அதிக வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது.

வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தவை: சேவைகள் துறையில் (மூன்றாம் நிலை) அடைந்த 12.7% வளர்ச்சியும் இரண்டாம் நிலைத் துறையில் அடைந்த 9% வளர்ச்சியுமே மாநிலம் அதிக வளர்ச்சியை எட்டியதற்கு முக்கியமான காரணிகளாகும். முதன்மைத் துறையின் செயல்பாடு வெறும் 0.15% மட்டுமேயாகும். மாநிலத்தின் மொத்த மதிப்புக் கூட்டலில் மூன்றாம் நிலைத் துறையின் பங்களிப்பு 53% ஆகும். இரண்டாம் நிலைத் துறை, முதன்மைத் துறையின் பங்களிப்பு முறையே 37%, 10% ஆகும்.

மூன்றாம் நிலைத் துறையினைப் பொருத்தவரையில் மனை வணிகம் 13.6%, தகவல் தொடர்பு, ஒலிபரப்பு 13%, வர்த்தகம் பழுது நீக்கல், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் 11.7% எனப் பங்களித்திருக்கின்றன. இரண்டாம் நிலைத் துறையினைப் பொருத்தவரையில் உற்பத்தி, கட்டுமானம் முறையே 8%, 10.6% வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன.

பயிர்த் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவை முதன்மைத் துறையின் முக்கியமான பிரிவுகளாகும். இவ்விரண்டு பிரிவுகளும் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியினைப் பெற்றிருக்கவில்லை. பயிர்த் தொழில் -5.93% வளர்ச்சியினையும் கால்நடை வளர்ப்பு 3.84 சதவீதம் பதிவு செய்துள்ளன.

சென்னைப் பொருளியில் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான முனைவர். கே.ஆர். சண்முகம், 2021-22 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சியினைத் தமிழ்நாடு எய்தி வருவதாகத் தெரிவிக்கிறார். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த 9.7% என்ற வளர்ச்சி வீதத்தினைத் தக்கவைத்துக் கொண்டால், 2032-33 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை நாம் எட்டியுள்ளோம் என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரியது.

அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து