Idhayam Matrimony

கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழகம் வந்தது

புதன்கிழமை, 21 மே 2025      தமிழகம்
Kandaleru-Dam

Source: provided

திருவள்ளூர் : தெலுங்கு - கங்கை கால்வாய் மதகு சீரமைப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த கிருஷ்ணா நதி நீர், மீண்டும் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு நேற்று (மே 21) காலை தமிழக எல்லையை வந்தடைந்தது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு ஆண்டு தோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி., ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. என, 12 டி.எம்.சி. கிருஷ்ணா நதி நீரை தமிழகத்துக்கு வழங்கவேண்டும். அந்த வகையில், ஆந்திர அரசு, சென்னையின் குடிநீர் தேவைக்காக ஜனவரி முதல் ஏப்ரல் வரை வழங்கவேண்டிய கிருஷ்ணா நதி நீரை வழங்கவேண்டும் எனக் கோரி, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினர்.

இதையடுத்து, சென்னைக் குடிநீருக்காக ஆந்திர மாநிலம் - கண்டலேறு அணையில் இருந்து, தெலுங்கு - கங்கை திட்ட கால்வாய் மூலம் கிருஷ்ணா நதி நீரை கடந்த மார்ச் 24-ம் தேதி ஆந்திர நீர்வளத்துறையினர் திறந்தனர். கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், 152 கி.மீ., தூரம் பயணித்து, தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு கடந்த மார்ச் 28-ம் தேதி காலை வந்தடைந்தது. தொடர்ந்து, அந்த நீர், கடந்த மார்ச் 30-ம் தேதி பூண்டி ஏரியை சென்றடைந்தது.

இந்நிலையில், திறக்கப்பட்டு வந்த கிருஷ்ணா நதி நீர், தெலுங்கு - கங்கை கால்வாயில், ஆந்திர மாநிலம் - ஸ்ரீகாளஹஸ்தியில் மதகு சீரமைப்பு பணி மேற்கொள்வதற்காக ஏப்.19-ம் தேதி ஆந்திர நீர்வளத்துறையினர் நிறுத்தினர். இதனால், கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லைக்கு வருவது ஏப்.24-ம் தேதி, முற்றிலுமாக நின்று போனது.

இச்சூழலில், தெலுங்கு-கங்கை கால்வாய் மதகு சீரமைப்பு பணி முடிவடைந்ததையடுத்து, மே 5-ம் தேதி மீண்டும் சென்னை குடிநீருக்காக கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர நீர்வளத்துறையினர் , திறந்தனர். தொடக்கத்தில் விநாடிக்கு 500 கன அடி என, திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 19-ம் தேதி விநாடிக்கு 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், 4 அல்லது 5 நாட்களில் தமிழக எல்லையான தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வரவேண்டிய நிலையில், 10 நாட்கள் தாமதமாக நேற்று காலை 7 மணிக்கு வந்தடைந்தது. அப்போது, தமிழக எல்லைக்கு வந்த கிருஷ்ணா நதி நீரின் அளவு விநாடிக்கு 50 கன அடியாக இருந்தது என, கூறும் தமிழக நீர்வள ஆதாரத் துறையினர், இரவுக்குள் (நேற்று) 25 கி.மீ., தூரம் பயணித்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் சென்றடையும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், கண்டலேறு அணையில் இருந்து, மீண்டும் திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், தமிழக எல்லைக்கு 10 நாட்கள் தாமதமாக வந்தடைந்ததற்கு தெலுங்கு - கங்கை கால்வாயில், ஸ்ரீகாளஹஸ்தி முதல் சத்தியவேடு வரையான பகுதிகளில், ஆந்திர விவசாயிகள் சட்ட விரோதமாக மின்மோட்டார்கள் மூலம் கிருஷ்ணா நதி நீரை உறிஞ்சியதுதான் காரணம் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து