Idhayam Matrimony

புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு இலவச லேப்டாப் வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி தகவல்

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2025      தமிழகம்
Udayanidhi-1 2023-10-15

சென்னை, புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். இலவசமாக மடிக்கணினிகள் வழங்குவதை விமர்சிக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடியின் கனவு பலிக்காது. தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இப்போது ஏன் லேப்டாப் கொடுக்கிறீர்கள் என்ற கேள்வியை திடீர் 'கணினி நிபுணர்' எடப்பாடி பழனிசாமி எழுப்பி இருக்கிறார்.

இன்னும் சில வாரங்களில் நம் மாணவர்கள் கரங்களுக்கு மடிக்கணினிகள் சென்று சேரவுள்ள நிலையில், இந்தக் கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பியுள்ள நோக்கம் என்ன என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றாகத் தெரியும். தன்னுடைய குறுகிய அரசியல் லாபத்திற்காக, கல்லூரி மாணவர்கள் பயன்பெற இருக்கும் ஒரு திட்டத்துக்கு எதிராக அவதூறுகளைப் பரப்ப வேண்டும் என்பதே அவருடைய எண்ணம். தமிழ்நாட்டு மாணவர்கள் படித்து முன்னேறிவிடக் கூடாது என்ற பாசிச பா.ஜ.க.வின் எண்ணத்தை, அவர்களின் வழிகாட்டுதலின்படி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

ஏற்கனவே அறநிலையத்துறை நிதியில் கல்லூரி ஆரம்பிக்கலாமா என்று கேட்டு, தமிழ்நாட்டு மக்களிடமும் – மாணவர்களிடமும் வாங்கிக்கட்டிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, இப்போது, “கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஆண்டின் நடுவில் ஏன் லேப்டாப் கொடுக்கிறீர்கள்,” என்கிறார். கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கிடைப்பதை வரவேற்கும் பரந்த மனப்பான்மைகூட இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்தத் திட்டத்தை எப்படியாவது சீர்குலைத்துவிட முடியாதா என்று முயற்சிக்கிறார்.

ஆனால், முதல்வர் தலைமையிலான நம்முடைய திராவிட மாடல் அரசு நிச்சயமாக கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கத்தான் போகிறது. இதை எடப்பாடி பழனிசாமி அல்ல, அவர்களது டெல்லி ஓனர்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது.  ஏதோ தேர்தலுக்காக திடீரென லேப்டாப் கொடுக்கப்படுகிறது போன்ற ஒரு பொய் பிம்பத்தை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி முயல்கிறார். 2025-2026 நிதிநிலை கூட்டத்தொடரின் போதே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அதாவது, “20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்” என்று தெளிவாக நிதிநிலை அறிக்கையில் உள்ளது.

அந்த நிதிநிலை அறிக்கை அவருக்கும் வழங்கப்பட்டு இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் அதை படித்துப் பார்த்தாரா, இல்லை, வழக்கம்போல வீட்டிலேயே வைத்துவிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம். லேப்டாப் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு, லேப்டாப் வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. 

மேலும், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அறிக்கையில், "இன்றைய ஏஐ காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு இவர்கள் தரும் லேப்டாப் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை" என்று சொல்லியிருக்கிறார். நான் இதுவரை எடப்பாடி பழனிசாமியை சேக்கிழார் எழுதிய கம்ப இராமாயணத்தைப் படித்த தமிழ்ப் புலவர் என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

அவர் தமிழ்ப் புலவர் மட்டுமல்ல. அவர் சிறந்த கணினி நிபுணர் என்பதும் இப்போதுதான் தெரிந்தது. அரசின் லேப்டாப் மாணவர்களின் கரங்களுக்கு இனி தான் சென்ற சேர இருக்கிறது. அதற்குள்ளாக, நம்முடைய ‘கணினி நிபுணர்’ எடப்பாடி பழனிசாமி, லேப்டாப்பில் தொழில்நுட்பம் போதவில்லை – கட்டமைப்பு சரி இல்லை என்று கதைவிடுகிறார். கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்றவாறு, அதிவேக பிராசசர் மற்றும் நீண்டநேரம் தாங்கும் பேட்டரி(Battery) என அத்தனை நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த லேப்டாப் இருக்கிறது.

அமெரிக்காவின் பெர்பிளெக்ஸிட்டி நிறுவனத்தோடு எல்காட் நிறுவனம் ஒரு சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி 6 மாத காலத்திற்கு பெர்பிளெக்ஸிட்டி புரோ ஏஐ வசதி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்படி தரம், தொழில்நுட்பம், வசதி என அனைத்திலும் சிறப்பாக இருக்கக்கூடிய மடிக்கணினிகளை கல்லூரி மாணவர்களுக்கு நம் அரசு வழங்க இருக்கிறது. எனவே, மாணவர்களுடைய கல்வி கனவை எப்படி சிதைக்கலாம் என்று சிந்திப்பதை விட்டுவிட்டு, எடப்பாடி பழனிசாமி வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான அரசியல் பணிகளை செய்தால் நன்றாக இருக்கும் என அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து