முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியில் தனியார் நிலங்கள் அபகரிப்பு 1449 புகார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை-ஜெயலலிதா உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 11 - தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தனியார் நிலங்கள், சொத்துக்களை அபகரித்ததாக வந்த 1449  புகார்களை விசாரிக்க காவல்துறையின் தலைமையகம் மற்றும் மாவட்டங்களில்  சிறப்பு பிரிவுகளை அமைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-  2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தனியார் நிலங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் கட்டாய விற்பனை பெரும் அளவில் நடைபெற்றதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவேதான் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ``கருணாநிதியின் குடும்பத்தினர்களாலும், தி.மு.க. மந்திரிகளாலும், அவர்களது கூலி படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, அவற்றை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
நில அபகரிப்பு தொடர்பாக கடந்த ஆட்சியிலேயே புகார்கள் அளிக்கப்பட்டிருந்தும் அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் முந்தைய தி.மு.க. அரசு எடுக்கவில்லை. 1.7.2011 வரை தமிழகம் முழுவதும் நில அபகரிப்பு தொடர்பாக 1449 புகார்கள் பொதுமக்களிடமிருந்து தமிழக காவல்துறையினரால் பெறப்பட்டுள்ளன. மேற்கொண்டும், இது தொடர்பான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் இவற்றை தற்போது உள்ள காவல் நிலையங்களில் விசாரிப்பது என்பது மிகவும் கடினமாக ஒன்றாகும்.
எனவே இவ்வாறான நில அபகரிப்பு வழக்குகளை பதிவு செய்து, தகுந்த விசாரணை மேற்கொள்வதற்காக காவல்துறையில் தனியாக சிறப்பு பிரிவு ஒன்றை காவல் துறை தலைமை அலுவலகத்திலும், மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த நான் ஆணையிட்டுள்ளதோடு இந்த நில அபகரிப்பு தொடர்பாக  பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நான் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த சிறப்பு பிரிவு, கடந்த தி.மு.க. ஆட்சி காலமாகிய 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான புகார்கள் மீதான விசாரணைகளை மேற்கொண்டு, இந்த  மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள இதர சட்டங்களின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கும். இதன் மூலம், நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதையும், மீட்கப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் சட்டப்படி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது இந்த நடவடிக்கை நிலத்தை இழந்தவர்களுக்கு- தங்கள் நிலங்கள் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று தமிழக முதல் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்