முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாயப்பட்டறை தீர்வு மூலம் கொங்கு மண்டலத்தை காத்த தெய்வம் ஜெயலலிதா-எஸ்.பி.வேலுமணி

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 18 -  சாயப்பட்டறை தீர்வு மூலம் கொங்கு மண்டலத்தை  காத்த கருணை தெய்வம் முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம் சூட்டினார். சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு தொழில்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது: ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னால் வாராது போல் வந்த மாமணி, காய்ந்து சிவந்த கதிரவனின் நிறத்தை ஈந்து சிவந்த கரத்தாலே வென்ற எங்கள் வாய்மை மிக்க தூய்மை தலைவி,உலக தமிழ்மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை  வணங்குகிறேன்.  புண்ணிய பூமியில் பிறந்த பொன்னும்,வைரமும், தண்ணீரிலே தோன்றிய முத்தும் பவளமும்,  தடாகத்தில் மலர்கின்ற அல்லியும் தாமரையும்,  சோலையில் கிடைக்கின்ற மாவும் பலாவும், காடுஅள்ளித்தரும் அகிலும் சந்தனமும் , நல்லமான் தருகின்ற கஸ்தூரியும், தமிழின் இனிமையும், வளமையும் பெருமையும் போல் கோடான கோடிமக்களின் மனக்கோவிலில் கொலுவிருக்கும் வாடாத பாரிஜாதமே, மாணிக்க மணி தீபமே, தேடாது கிடைத்த செல்வமே,  எங்கள் இதயங்களில் வாழும் குல தெய்வமே, சிலம்புண்டு, மணிமேகலையுண்டு,வளையாபதி- சீவகசிந்தாமணி, பாரதி -பாரதிதாசன் எனும் குங்குமத் திலகமுண்டு,இவையனைத்தும் தமிழ் அன்னைக்கு காப்பாகும். தஞ்சைத் தரணியில் உலகத்மிழ்மாநாடு நடத்தி முத்தமிழுக்குப்பின் ,அறிவியல் தமிழை இந்த உலகுக்கு அறிவித்த தமிழாய்ந்த தமிழ்மகளே, ஏழரைக்கோடி தமிழ் சமுதாயத்தின் ஆராதனைக்குரியவரே, அடிமட்டத்தொண்டனையும், எம்.பி. எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்களாகவும் ஆளாக்கி  அழகுபார்க்கும் எங்களின் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. வின் கடைக்கோடி உண்மைத் தொண்டனாயிருந்த என்னை மாணவரணி பொறுப்பாளராக நியமித்து பல்வேறு கட்சி பொறுப்புக்களில்  அமரவைத்து அழகு பார்த்து பின்னர் இரண்டுமுறை  தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக்கி  பின்னர் அமைச்சராக்கிய இந்தியாவின் இரும்புப்பெண்மணி, தங்கத்தாரகை, எங்கள் குடும்ப விளக்கு,தமிழகத்தின் குலவிளக்காகிய தங்களுக்கு என் கோடானகோடி வணக்கங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
என்னுடைய வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவது மட்டுமல்லாமல்,என் குடும்பத்தினர், என் வழிவரும் சந்ததியர்கள் அத்தனை பேரும் நன்றியோடு இருந்தாலும் நன்றிக் கடன் தீராது. ஏழைகளின் நில அபகரிப்பில் கொள்ளையடித்து அகப்பட்டுக்கொண்டவர்கள் நோட்டுக்கு ஓட்டு என்ற திருமங்கலம் பாணி திருடர்களின் கொட்டத்தை அடக்கிய எங்கள் பட்டத்து அரசியே, தமிழ் ஈழத்தை இழவாக்கிவிட்டு கோவையில் கொண்டாட்டம் போட்ட குள்ளநரி கூட்டங்கள்,கொள்ளையடித்த பணத்தில் கூட்டம் சேர்த்து கலையிலும், இலக்கியத்திலும் நச்சுக்கலந்து சந்தை பொருளாக்கி செந்தமிழை விற்றுப்பிழைக்கும் தீயசக்திகளின் ஆறாவது முறையாத தமிழக முதல்வர் என்று கொக்கரித்த துரோகிகளை , 14 வது சட்டமன்ற தேர்தலில்  வீழ்த்திக்காட்டி மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்று அ.தி.மு.க. வை கோட்டையில் அமரவைத்த எங்கள் குலவிளக்கே,  எதிரிகள் ஏசிடும் சுடுமொழிகளை வீசிடும் குளிர் தென்றலாய் ஏற்று புன்னகை க்கும் புதுநிலவே, மைனாரிட்டி தி.மு.க.அரசின் கொடுங்கோல் குடும்ப ஆட்சியிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற  கோவை, திருச்சி, மதுரை ஆகிய  இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மக்களுக்காக போராடி வெற்றி கண்ட  எங்கள் வணக்கத்துகுரிய அன்னையே.
அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் அரசியல் வாதி, ஆனால் அடுத்த தலைமுறைப்பற்றி சிந்திப்பவன் ஜனநாயகவாதி என்ற வரிகளுக்கேற்ப மக்களாட்சித் தத்துவத்தை  புரியவைத்த புனிதவதியே, பகைமை அன்பு வெல்லும், துரோகத்தை தியாகம் வெல்லும், அச்சத்தை துணிவு வெல்லும்,  அநியாயத்தை நியாயம் வெல்லும், அதர்மத்தை தர்மம் வெல்லும், அட்டூழியத்தை அறம் வெல்லும் இவற்றின்ஒட்டுமொத்த உருவாமாக திகழும் எங்கள் அன்னையே!
கருணாநிதியின் சவால்களையும் , பொய் வழக்குகளையும் சந்தித்து,நீதிமன்றங்களின் நெடியபடிக்கட்டுகளில் ஏறியிறங்கி வழக்குகளை சந்தித்தபோது அன்றைய காங்கிரஸ் கட்சியை சார்ந்த எதிர்கட்சி தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் ஜெயலலிதா மீதான பொய்வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு நிகழ்வுகளை மேற்கோள்காட்டி வழக்குகளை திரும்பப்பெற கோரியதில், அதற்கு பதிலுரையாக முதல்வர் ஜெயலலிதா துணிச்சலோடு,அத்தனை வழக்குகளையும் நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதி என நிரூப்பிப்பேன் என்று சூளுரைத்து, நான் வண்ணத்துப் பூச்சி அல்ல. நான் ஒரு இரும்புப்பெண்மணி  என்றுரைத்த இந்தியாவின் வீரப்பெண் நேதாஜியே.
தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்னார் ஏசுபிரான், ஆனால் தட்டாமலேயே அள்ளித்தரும் அட்சயபாத்திரம் எங்கள் முதல்வர், பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலுள்ள சாயப்பட்டறை உரிமையாளர்களின் குறையறிந்து, சாயப்பட்டறைகளில் புதிய தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்க ரூபாய் 200 கோடியை வட்டியில்லா கடனாகவும் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு  விவசாயிகளின் குடும்ப நலனுக்காக ரூபாய் 18.38 கோடியை அள்ளி வழங்கி கொங்கு மண்டலத்தைக் காப்பாற்றிய கருணை தெய்வமே,  வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாகத் திகழும் உங்கள் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.இனி என்றைக்கும் தமிழக நிரந்தர முதல்வர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்